உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இந்தியர் அல்லாதவர்களிடம் பாகுபாடு காக்னிசன்ட் மீதான வழக்கில் தீர்ப்பு

இந்தியர் அல்லாதவர்களிடம் பாகுபாடு காக்னிசன்ட் மீதான வழக்கில் தீர்ப்பு

பெங்களூரு:இந்தியர் அல்லாத ஊழியர்களிடம் பாகுபாடு காட்டியதாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான 'காக்னிசன்ட்' மீதான வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்துள்ளது.இந்தியா, தெற்காசியாவை சேராத ஊழியர்களிடம், காக்னிசன்ட் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாகவும்; தங்களுக்கு ஐந்து வாரங்கள் பணி ஏதும் தராமல், வேலையை விட்டு நிறுத்தியதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் கிறிஸ்டி பால்மர் என்ற ஊழியர் வழக்கு தொடர்ந்தார்.ஊழியர் தேர்வு, பதவி உயர்வு, பணிநீக்கம் ஆகியவற்றில், இந்நிறுவனம் தனக்கென சில கொள்கைகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதாக அதில் குற்றம்சாட்டப்பட்டது. எந்த நாட்டு குடிமகன் என்பதிலும் அவரது இன அடிப்படையிலும், பணிக்கு தேர்வு செய்வதிலும்; பணியிடத்திலும் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறப்பட்டது.கடந்த 2013ம் ஆண்டில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை சுட்டிக்காட்டி, 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள காக்னிசன்ட் நிறுவனம், நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் பொதுவான, சமமான பணி வாய்ப்புகளையும் சூழலையும் வழங்கி வருவதாகவும், பணியிடப் பாகுபாட்டை ஒருபோதும் சகிப்பதில்லை என்றும் காக்னிசன்ட் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !