வேலைக்காக இடம்பெயர்வோர் குறைவது கவலையளிக்கிறது
சென்னை:நாட்டில் வேலைக்காக இடம்பெயர்வது குறைந்து வருவது, மிகப்பெரிய கவலைக்குரியதாக மாறி வருவதாக, எல் அண்டு டி., நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.சென்னையில் சி.ஐ.ஐ., அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது:தற்போது பணியாளர்கள் பற்றாக் குறை கவலையளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக இருக்கும் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல தயாராக இல்லை. இதற்கு, அவர்களது உள்ளூர் பொருளாதாரம் சிறப்பாக இருப்பது காரணமாக இருக்கலாம். அரசின் பல்வேறு திட்டங்கள், நேரடி நலத்திட்டங்கள் கிடைப்பது காரணமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், தொழிலாளர்கள் இடம்பெயரத் தயாராக இல்லை.இதேபோன்று, வேலைக்காக இடம்பெயரத் தயங்கும் சூழல், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டத்தில் இருப்போரிடமும் காண முடிகிறது. சென்னையில் இருந்து வரும் நபரிடம், டில்லி சென்று பணிபுரிய சொன்னால், அவர் விடைபெற்று சென்று விடுகிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.