உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிகிச்சை அளிக்காததால் நோயாளி இறந்தார்:மனித‌நேயத்தை மறந்த ஜிப்மர் டாக்டர்கள்

சிகிச்சை அளிக்காததால் நோயாளி இறந்தார்:மனித‌நேயத்தை மறந்த ஜிப்மர் டாக்டர்கள்

புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளி நள்ளிரவில் அலைகழிக்கப்பட்டு இறந்த சம்பவம் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் மேலநடுவாய் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகசாமி, 38. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் ஒரு வாரமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு, டாக்டர்கள் பரிந்துரைத்தனர். நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு ஜிப்மர் மருத்துவமனை அவசர பிரிவிற்குக் கொண்டு வரப்பட்டார். உடன் மனைவி மேரி இருந்தார்.

பெரியநாயகசாமியை பரிசோதித்த டாக்டர்கள் இது சாதாரணமானது. காலையில் மருத்துவமனை ஓ.பி.டி.,யில் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் சென்று கூறினர். கணவரின் உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் காரில் அழைத்து சென்றார் மேரி. பெரியநாயகசாமியை பரிசோதித்த அரசு டாக்டர்களோ 'ஜிப்மர் மருத்துவமனையில் மட்டுமே இந்த வசதி உள்ளது. உடனடியாக அங்கு அழைத்து செல்லுங்கள்' என்று சீட்டு எழுதி கொடுத்து கைவிரித்து விட்டனர். வேறு வழியின்றி காரிலேயே மீண்டும் ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து கொண்டு கொட்டும் பனியில் விடிய விடிய காத்திருந்தனர். இந்நிலையில் விடியற்காலை 6 மணிக்கு பெரியநாயகசாமிக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது.

பதட்டமடைந்த உறவினர்கள் பெரியநாயகசாமியை மீண்டும் தூக்கிக் கொண்டு ஜிப்மர் டாக்டர்களிடம் ஓடினர். பணியில் இருந்த டாக்டர்களோ 'உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுவது.. வெளியே செல்லுங்கள்' என்று கறாராக கூறிவிட்டனர். உறவினர்கள் கெஞ்சி பார்த்தும் பணியில் இருந்த டாக்டர்கள் மனமிறங்கவில்லை. டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில் சிறிது நேரத்தில் காரிலேயே பெரியநாயகசாமி உயிர் பிரிந்தது. ஆவேசமடைந்த உறவினர்கள் பணியில் இருந்த டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரியநாயகசாமி உறவினர்கள் கூறுகையில், 'ஜிப்மர் சிறந்த மருத்துவமனை என்று சொன்னதால் இங்கு அழைத்து வந்தோம். ஆனால் டாக்டர் மனிதநேயமில்லாமல் அலைகழித்து கொன்றுவிட்டனர். அலட்சியமாக இருந்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கதறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி