மீண்டும் கொரோனாஉலகம் முழுதும் கொரோனா தொற்று, மக்களை வாட்டி வதைத்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி இருந்தாலும், கொரோனா ஏற்படுத்திய கசப்பான அனுபவங்கள், மனதை விட்டு அகலவில்லை. கொரோனா குறித்து ஏற்கனவே பல திரைப்படங்கள் வந்துள்ளன. இப்போது நைட் கர்ப்யூ படமும், இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.கொரோனா மட்டுமின்றி குற்றங்கள், சமூக அமைதி தொடர்பான விஷயங்களும் அடங்கியுள்ளன. கொரோனா நேரத்தில், மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல், நோயாளிகள் அவதிப்பட்டது, ஊரடங்கு உட்பட உண்மை சம்பவங்களை சேர்த்து, திரைக்கதை பின்னியுள்ளனர். இதில் நடிகை மாலாஸ்ரீ டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரஞ்சனி ராகவனும் டாக்டராக நடித்துள்ளார்.பெண்களுக்கு முக்கியத்துவம்நடிகை ராகினி திரிவேதி, தற்போது கன்னட படங்களில் பிசியாக இருக்கிறார். இ மெயில் படம் ஏற்கனவே திரைக்கு வந்துள்ளது. விருஷபா படப்பிடிப்பு நடக்கிறது. இதற்கிடையே மற்றொரு புதிய படத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கிரிராஜ் இயக்குகிறார். சமீபத்தில் ராகினி திரிவேதியின் போஸ்டரை வெளியிட்டனர். விரைவில் படப்பிடிப்பை துவக்க, படக்குழுவினர் தயாராகின்றனர். இவர் சமீப நாட்களாக, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காண்பிக்கிறார்.பிரேமலோகா - 2 கடந்த 1987ல் திரைக்கு வந்த பிரேம லோகா, கன்னட திரையுலகில் புதிய அத்தியாயத்தை எழுதியது. அழகான காதல் கதை கொண்ட இந்த படத்தில், ரவிச்சந்திரன், ஜூஹி சாவ்லா இளம் காதலர்களாக நடித்திருந்தனர். படத்தின் பாடல்களை சினி ரசிகர்கள், இப்போதும் மறக்கவில்லை.அந்த அளவுக்கு பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. பல ஆண்டுகளுக்கு பின், பிரேமலோகா - 2 என்ற பெயரில், திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இதில், ரவிச்சந்திரனின் மூத்த மகன் மனோரஞ்சன் நடிக்கிறார். மே 30ல் படப்பிடிப்பை துவக்க, ஏற்பாடு நடக்கிறது. படத்துக்கு நாயகியை தேடினர். நடன கலைஞரும், நடன இயக்குனருமான தேஜு அஸ்வினியை நாயகியாக தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.ஹீரோ வேஷம் என்ன?நடிகர் தனஞ்செயா நடிக்கும், கோடி திரைப்படம் ஜூன் 4ல் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வில்லனை படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். சப்த சாகரதாச்சே எல்லோ படத்தில், சோமா என்ற ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டிய ரமேஷ் இந்திரா, கோடி படத்தில் தினு சாவ்கர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெண்மையாக நரைத்த தலைமுடி, தாடி, மீசை, கழுத்தில் ஒரு செயின், வாயில் சிகரெட், கண்களில் எதிராளியை கலங்கடிக்கும் கொலை வெறி என, முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். நாயகன் தனஞ்செயா கதாபாத்திரத்தை, ரகசியமாக வைத்துள்ளனர்.திருப்புமுனைஆப்பரேஷன் அலமேலம்மா, கவலுதாரி போன்ற மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்த நடிகர் ரிஷி, தற்போது ருத்ர கருட புராணா என்ற படத்தில் நடிக்க தயாராகிறார். சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்வினி புனித் ராஜ்குமார், படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தில் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜூலையில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார். இந்த படம் தனக்கு, திருப்புமுனையாக அமையும் என, ரிஷி நம்புகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா குமார் நடிக்கிறார்.புதிய கதை கருதிருமணம், பார்ட்டி போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில், பலரும் சூட் அணிவது வழக்கம். இதையே கதைக்கருவாக கொண்டு, தி சூட் என்ற பெயரில் படம் திரைக்கு வர தயாராகிறது. வரும் 17ல் திரைக்கு வருகிறது. மூத்த இயக்குனர் காசிநாத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பகத்ராஜ், இந்த படத்தை இயக்குகிறார். மாலதி கவுடா மற்றும் ராமசாமி தயாரிக்கும் இந்த படத்தில், 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். சூட் மட்டுமின்றி, காதல், பாசம் என பல அம்சங்கள் கொண்டுள்ள படமாகும்.