சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்பட உள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்திற்கு, வரலாற்று சிறப்புமிக்க ஆவணம், அரிய பொருட்களை நன்கொடையாக வழங்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விடுதலை போராட்டத்தில், தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில், சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதற்காக, மெரினா கடற்கரை எதிரேயுள்ள, பாரம்பரிய கட்டடமான ஹூமாயூன் மஹாலில், 80,000 சதுரடி பரப்பளவில், மாபெரும் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகம் சிறப்பாக அமைய அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.இதற்காக, மக்களின் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ., சீருடைகள் மற்றும் அஞ்சல் தலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளை நன்கொடையாக, சென்னை மாவட்ட அருங்காட்சியகத்திற்கு அளிக்கலாம்.வழங்கப்படும் பொருட்களுக்கு, உரிய ஒப்புகை கடிதமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். அரிய பொருட்களை பார்வைக்கு வைக்கும் போது, அதை வழங்கியவரின் பெயரும் இடம் பெறும்.சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள், தங்களிடம் உள்ள அரிய பொருட்களை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.