உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுமை! ரூ.1.16 லட்சம் கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு: 16வது முறையாக சித்தராமையா பட்ஜெட் தாக்கல்

சுமை! ரூ.1.16 லட்சம் கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு: 16வது முறையாக சித்தராமையா பட்ஜெட் தாக்கல்

பெங்களூரு, மார்ச் 8- காங்கிரஸ் ஆட்சியின் 3வது பட்ஜெட்டை சட்டசபையில், முதல்வர் சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். இவர், 16வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.இலவச திட்டங்களால் பொருளாதாரம் உயர்வதாக 'சால்ஜாப்பு'மொத்தம் 4.09 லட்சம் கோடி ரூபாய்க்கு சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில், 1.16 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இருப்பதாக தெரிவித்தார். அதே நேரம், சிறுபான்மையினரை, 'தாஜா' செய்வதற்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி உள்ளார். விவசாயிகளுக்கு 28,000 கோடி ரூபாய் கடன் வழங்க ஒதுக்கீடு செய்துள்ளவர், மதுபானங்களின் விலையை இந்தாண்டும் உயர்த்துவதாக தெரிவித்தார். மேலும், இலவச திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாகவும், 'சால்ஜாப்பு' தெரிவித்தார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், 2023 மே 20ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. நிதித்துறையை நிர்வகிக்கும் அவர், இந்த ஆட்சியில் இரண்டு முறை ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.

முறியடித்த சித்து

இந்நிலையில், காங்கிரஸ் அரசின் மூன்றாவது மற்றும் 2025 - 26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கர்நாடக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இது, இவர் தாக்கல் செய்த 16வது பட்ஜெட் ஆகும். கடந்தாண்டு இவர் தாக்கல் செய்த 15வது பட்ஜெட் தான், ஒருவர் தாக்கல் செய்ததில் அதிகபட்சமாக இருந்தது.தற்போது, 16வது முறையாக, நாட்டிலேயே அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சாதனையை சித்தராமையா படைத்துள்ளார். அதாவது, தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

ரூ.4.09 லட்சம் கோடி

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக காலை 9:00 மணிக்கு, சக்கர நாற்காலியில் விதான் சவுதாவுக்கு வந்தார். 9:45 மணிக்கு சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்தி, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார். கடந்தாண்டு, 3.71 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.நடப்பு 2025 - 26ம் ஆண்டிற்கு, 4 லட்சத்து, 9,549 கோடி ரூபாய் மதிப்பில் தாக்கல் செய்தார். இது, கடந்தாண்டை விட, 38,166 கோடி ரூபாய் அதிகமாகும். இதில், மூலதனம் மற்றும் வருவாய் செலவும் அடங்கும். மொத்த பட்ஜெட்டில், 2 லட்சத்து 8,100 கோடி ரூபாய், மாநிலத்தின் சொந்த வரி மூலமும்; வரி இல்லாத வருவாய் மூலம் 16,500 கோடி ரூபாயும்; மத்திய அரசு நிதியின் கீழ், 67,877 கோடி ரூபாயும் வருகிறது.மேலும், 2025 - 26ம் ஆண்டிற்கு மொத்தம் 1.16 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கடன் 7.65 லட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது. கடன் இல்லாத மூலதன வருவாய் மூலம் 170 கோடி ரூபாய் வர உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.அப்படி பார்க்கும் பட்சத்தில், மொத்தம் 4 லட்சத்து 8,647 கோடி ரூபாய் ஆகிறது. அந்த வகையில் வருவாயை விட, செலவு அதிகமாக இருப்பதால், இது 902 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் ஆகும்.காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு இந்தாண்டு 51,034 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குறுதி திட்டங்களால் பொருளாதாரம் நலிவடையவில்லை என்றாலும், சமூக பாதுகாப்பின் மூலம் மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

மன்மோகன் சிங்

கடந்தாண்டை போலவே இந்தாண்டும் மதுபான விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கவுரவிக்கும் வகையில், பெங்களூரு நகர பல்கலைக்கழகத்துக்கு, அவரது பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.இயந்திரங்கள் வாங்க, சொட்டுநீர்ப் பாசனம், பதப்படுத்தும் மையங்கள், விவசாய குளங்கள், 50,000 விவசாயிகளுக்கு நிதியுதவி உட்பட விவசாயிகள் நல திட்டங்களுக்கு, 28,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.சிறுபான்மையினரை கவரும் வகையில், யாரும் எதிர்பாராத வகையில், திட்டங்கள் வாரி வழங்கப் பட்டுள்ளன. ஏழை சிறுபான்மையினர் திருமணத்திற்கு 50,000 ரூபாய் உதவித்தொகை, அவர்கள் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு என பல்வேறு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டு

அதே நேரம், மாநிலத்துக்குரிய வரி பங்கு, மானியம், நிவாரண நிதியை, மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை என்று முதல்வர் குற்றஞ்சாட்டினார். கல்வி, மகளிர், இளைஞர்கள் மேம்பாடு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு, இம்முறை பட்ஜெட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.பட்ஜெட் வாசித்து முடித்ததும், துணை முதல்வர் சிவகுமார் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.'பட்ஜெட் என்னவோ ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் முறையாக நிறைவேற்றவில்லை' என்பது மக்களின் கருத்தாக உள்ளது.நல்ல நேரம் பார்த்த முதல்வர்முதல்வர் சித்தராமையா, சரியாக நேற்று காலை 10:16 மணிக்கு பட்ஜெட் புத்தகத்தை வாசிக்க துவங்கினார். ஆரம்பத்தில் நின்று கொண்டு வாசித்தார். பின் கால் வலி காரணமாக, சபாநாயகர் காதர் அனுமதியுடன் அமர்ந்து கொண்டு வாசித்தார். கன்னட மொழியில் 178 பக்கங்களையும், மதியம் 1:45 மணிக்கு வாசித்து முடித்தார். அதாவது 3.29 மணி நேரம் எடுத்து கொண்டார்.இடையிடையே குவெம்பு, கோபாலகிருஷ்ணா அடிகா, குமாரவியாசா, வில்சன் கட்டீல், அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா, நிசார் அகமது, நுலிய சந்தையா ஆகியோரது கருத்துகள், கவிதைகளை வாசித்து மேற்கோள் காட்டினார். கடந்தாண்டும், காலை 10:16 மணிக்கு தான் பட்ஜெட் புத்தகத்தை வாசிக்க துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளும், ராகு காலம் துவங்குவதற்கு முன்னரே நேரம் பார்த்து வாசிக்க துவங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ