உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டத்துறை அமைச்சர் கிராமத்திலேயே பெண்களுக்கு நிதி நிறுவனம் தொந்தரவு

சட்டத்துறை அமைச்சர் கிராமத்திலேயே பெண்களுக்கு நிதி நிறுவனம் தொந்தரவு

கதக்: சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீலின் கிராமத்திலேயே, மைக்ரோ நிதி நிறுவனத்தின் இம்சையால், பெண்கள் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் மைக்ரோ நிதி நிறுவனங்களின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிறுவன ஊழியர்களின் இம்சை தாங்காமல், சில இடங்களில் ஊரை விட்டே ஓடுகின்றனர்.தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடக்கின்றன. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் எச்சரிக்கைக்கும் நிறுவனம் பணியவில்லை.மைக்ரோ நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த, மாநில அரசு அவசர சட்டம் வகுத்து, கவர்னரின் பார்வைக்கு அனுப்பியது. கவர்னர் சில விளக்கங்களை கேட்டு, அவசர சட்டத்தை திருப்பி அனுப்பினார்.இந்த விளக்கங்களை, அரசு தெளிவுப்படுத்தி மீண்டும் அனுப்ப தயாராகிறது. சட்டம் அமலுக்கு வந்தால், சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.ஆனால் சட்ட அஸ்திரத்துக்கும், மைக்ரோ நிதி நிறுவனத்தினர் பயந்ததாக தெரியவில்லை. சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீலின் கிராமத்திலேயே, இந்நிறுவனத்தால் பெண்கள் பாதிப்படைந்துள்ளனர்.கதக்கின், ஹுலகோடே கிராமம், அமைச்சர் எச்.கே.பாட்டீலின் சொந்த கிராமமாகும். இங்கு வசிக்கும் பெண்கள், மைக்ரோ நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.இதை வசூலிக்க அதிகாலை, மாலையில் வீட்டுக்கு வந்து நிறுவன ஊழியர்கள் தொந்தரவு கொடுக்கின்றனர்.இது குறித்து, புகார் அளிக்க பெண்கள் ஒன்று திரண்டு, நேற்று முன்தினம் கதக் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.அங்கேயும் நிதி நிறுவன ஊழியர்கள் வந்து, பெண்களுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெண்கள் மன்றாடுகின்றனர்.

வீடுகளில் சோதனை

கதக் - பெடகேரி இரட்டை நகரில் உள்ள, சில கந்து வட்டிக்காரர்கள் கடன் கொடுத்து, அதிக வட்டி வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதை தீவிரமாக கருதிய போலீசார், நேற்று காலை கதக் - பெடகேரியின், பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.கந்து வட்டிக்காரர்களின் வீடுகளில் சோதனை நடத்திய போது கட்டுக் கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது. பணம் எண்ணும் இயந்திரங்கள், வெற்று காசோலைகளை கைப்பற்றினர்.பலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்; எச்சரித்து அனுப்பினர். அதிக வட்டி வசூலித்தது தெரிந்ததால், ரவி, சங்கமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ