| ADDED : ஜூலை 03, 2024 10:20 PM
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், மாநிலத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் கடந்த மாதம் வரை, வறண்டு போய் இருந்த சுற்றுலா தலங்கள் எல்லாம் தற்போது பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. இதனால் சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.இதுபோல மைசூரின் முதுகுத்தோர் கிராமத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள முதுகுத்தோர் கிராமத்தில் நீர்வீழ்ச்சிகள், கோவில்கள் உட்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.தற்போது இந்த கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் இயற்கையை ரசித்து, மன அமைதியுடன் செல்கின்றனர். குடும்பத்தினருடன் இங்கு வருபவர்கள் காவிரி ஆற்றில் குளித்து உற்சாகமடைகின்றனர்.கிராமத்தில் உள்ள தென்னை தோட்டங்களுக்கு சென்று, இளநீர் குடிப்பதுடன், அங்கு அமர்ந்து நேரத்தையும் செலவழித்து வருகின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணியர், மன அழுத்தத்தை குறைக்க ஏற்ற இடம் என புகழாரம் சூட்டுகின்றனர். மீண்டும் ஒருமுறை இந்த இடத்திற்கு வர வேண்டும் என கூறி செல்கின்றனர். அந்த அளவுக்கு பயணியரை இந்த கிராமத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் கவர்ந்து உள்ளன. நீங்களும் ஒரு முறை குடும்பத்தினருடன் இங்கு சென்று வரலாமே.பச்சை பசேலென காட்சியளிக்கும் முதுகுத்தோர் கிராமம்.-- -நமது நிருபர் --