படிப்படியாக குறையும் ‘நோட்டா’
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ‘நோட்டா’ எனப்படும் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அசாம் மாநிலத்தில் மட்டும் 1.29 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 0.81, புதுச்சேரியில் 0.73 மக்கள் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப்போடவில்லை. கேரளத்தில், 0.58 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நோட்டா பட்டனை அழுத்தியுள்ளனர். தமிழகத்தில் 0.41 சதவீதம் பேர் நோட்டாவை பயன்படுத்தியுள்ளனர். கடந்த, 2013ம் ஆண்டு, நோட்டா என்ற பொத்தான் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய புள்ளிவிபரப்படி, கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களிலும் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024-ல் 0.99 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த, 2013ம் ஆண்டுக்கு முன், எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள் அதற்கான, ‘படிவம் 49-O’ ஐ நிரப்பி தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ஓட்டுச் சாவடியிலேயே இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டியிருந்ததால், வாக்காளரின் வாக்குரிமை ரகசியம் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்தே, ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் வரிசையில் கடைசியாக நோட்டாவுக்கும் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டது.