மாண்டியா; குடிநீர், விவசாயத்துக்காக, கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குடகு, மைசூரு, மாண்டியா என பல பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.இதனால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மைசூரின் கபினி அணைக்கு, வினாடிக்கு 5,118 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.இது போன்று, மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணைக்கு, வினாடிக்கு 6,146 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.அணையில் இருந்து, வினாடிக்கு 1,972 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், விவசாயம், குடிநீருக்காக, விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் திறக்கப்பட்டது.இந்த நீர், வலது, இடது கால்வாய்கள் வாயிலாக, விரிஜா, சிக்கதேவராயசாகர், பங்காரதொட்டி, ராமசாமி, ராஜபரமேஸ்வரி கால்வாய்களுக்கும் பாய்ந்து, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பாட்டுக்கு உதவும் என்று தெரிய வந்துள்ளது.'அடுத்த 15 நாட்கள் வரை தினமும் கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்' என்று காவிரி நீர் வாரிய உதவி செயற்பொறியாளர் கிஷோர்குமார் தெரிவித்தார். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.