| ADDED : மே 24, 2024 05:02 PM
பாலக்காடு: கேரள மாநில வனத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் வனச்சரக அதிகாரி ஜினேஷ் தலைமையிலான, வனத்துறையினர் சொரனுார் மருதுாரில் முகமது சக்கீர், 32, என்பவர், வாடகைக்கு தங்கியிருக்கும் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, 236 கிலோ சந்தன மர கட்டைகள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். தப்ப முயன்ற முகமது சக்கீர், அவரது கூட்டாளி பாபு, 41, ஆகியோரை, வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளிலிருந்தும், தனியார் தோப்புக்களில் இருந்தும் சந்தன மரங்களை வெட்டி, கட்டைகளாக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவது தெரிந்தது.பறிமுதல் செய்த சந்தன மர கட்டைகள், 35 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ளது. கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிப்பதற்கான விசாரணை தீவிரப்படுத்தி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.