ரூ.40 கோடி நிவாரணத்தில் மோசடி: 11 மஹா., அதிகாரிகள் சஸ்பெண்ட்
மும்பை: மஹாராஷ்டிராவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 40 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதில் மோசடி நடந்தது தொடர்பாக, 11 அரசு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் கடந்த 2022 முதல் 2024 வரை அதிகமழை பெய்ததால் பயிர்கள் சேதமடைந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் நிவாரணத்தை மாநில அரசு வழங்கியது. நிவாரணம் வழங்கியதில் மோசடி நடந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து நடத்தப்பட்ட தணிக்கையில், 40 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதில் தொடர்புடைய 10 தலாதிகள் எனப்படும் கிராம அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்நிலையில், தொடர் விசாரணையில், கிராம சேவகர்கள், வேளாண் உதவியாளர்கள் என, மேலும் 11 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிவந்தது. இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.ஜால்னா மாவட்டத்தின் பிற தாலுகாக்கள் மற்றும் மராத்வாடா பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கும் இந்த விசாரணையை நீடிக்க உத்தரவிட்டுள்ளது.