UPDATED : ஜூன் 04, 2025 06:29 PM | ADDED : மே 29, 2025 07:36 AM
புதுடில்லி: பார்லிமென்ட் முக்கிய கூட்டங்களில் கிட்டத்தட்ட 40% எம்.பி.க்கள் கலந்து கொள்ளாமல் இருந்த விவரம் வெளியாகி இருக்கிறது.இதுகுறித்து லோக்சபா வெளியிட்ட புள்ளி விவரத்தில் இடம்பெற்று உள்ள விவரங்கள் வருமாறு: * கடந்தாண்டு செப்டம்பர் மாதம் லோக்சபா நிலைக்குழுக்கள் (மொத்தம் 16 குழுக்கள்) மாற்றி அமைக்கப்பட்டது. அதனை அடுத்து கூடிய பல்வேறு கூட்டங்களில் மொத்தம் 60% உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். 40 % உறுப்பினர்கள் வரவே இல்லை.* மருந்துகள் விலை உயர்வு குறித்து ஜன.7ம் தேதி நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் 16 எம்.பி.,க்கள் தான் கலந்து கொண்டனர்.* ஏப்ரல் 25ம் தேதி வேளாண், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சக நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.,க்களின் எண்ணிக்கை 16 மட்டுமே. மார்ச் 18ல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இதே கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.,க்கள் 22 பேர். * மே 8ம் தேதி நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 15 மட்டுமே. * மே 9ம் தேதி ரசாயனம், உரங்கள் துறை அமைச்சகத்தின் நிலைக் குழு கூட்டத்தில் 15 எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். * மே 19ம் தேதி வெளியுறவு கொள்கை குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்த கூட்டத்தில் பங்கேற்ற் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 24. பார்லி. கூட்டத்தொடரின் போது பல்வேறு முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும். அந்த மசோதாக்களில் பெரும்பாலானவற்றை பார்லி.நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளில் உள்ள பெரும்பாலான எம்.பி.,க்கள் வலியுறுத்துகின்றனர்.அதன் பின்னர் அந்த மசோதாக்கள் பார்லி. நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த கூட்டங்களில் பங்கேற்க எம்.பி.,க்கள் ஆர்வம் காட்டாதது, தற்போது லோக்சபா வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இதுபோன்ற நிலைக்குழுக்கள்,நாட்டின் மினி பார்லிமெண்ட் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.