523 ஏக்கர் அரசு நிலம் முறைகேடு துணை தாசில்தார் சஸ்பெண்ட்
தங்கவயல்: தங்கவயல் தாலுகாவில் 523 ஏக்கர் அரசு நிலம் முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள துணை தாசில்தார் கே.சி.சுரேஷ் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.தங்கவயல் தாலுகாவில் அரசின் தரிசு நிலத்தை, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தில், 523 ஏக்கர் முறைகேடு நடந்துள்ளது. அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக 2024 அக்டோபர் 9ல் ஆண்டர்சன்பேட்டை அருகே உள்ள கங்கதொட்டி கிராமத்தின் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் கவுடா என்பவர், லோக் ஆயுக்தாவிடம் புகார் செய்தார்.லோக் ஆயுக்தா அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதைய தங்கவயல் தாசில்தார் சுஜாதா, உதவி தாசில்தார் கே.சி.சுரேஷ், அலுவலக ஊழியர் பவன்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தரிசு நிலம் வழங்கியதற்கான 229 கோப்புகளில், 169 கோப்புகளை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த கோப்புகளை ஆய்வு செய்தனர்.இவற்றில் முக்கிய ஆவணங்களை துணை தாசில்தார் கே.சி.சுரேஷ் அழித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நகராட்சி பகுதியின் 7 கி.மீ., சுற்றளவுக்குள் தரிசு நிலமாக இருந்தாலும் கூட, அதை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி பட்டா பதிவு செய்யக்கூடாது என்பது விதி.இந்த விதியை மீறி, நிலம் வழங்கி பட்டாவும் பதிவு செய்திருப்பதும், போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை முறைகேடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.எனவே இவ்வழக்கில் துணை தாசில்தார் கே.சி.சுரேஷை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக உள்ளாட்சித்துறையின் ஒழுங்கு நடவடிக்கைப்பிரிவு ஆணையர் அமலான் ஆதித்யா பிஸ்வாஸ் அறிவித்துள்ளார்.அப்போதைய தங்கவயல் தாசில்தார் சுஜாதா, தற்போது பங்கார் பேட்டை தாசில்தாராக இருந்து வருகிறார்.