டில்லியில் 75 சதவீத வீடுகளில் ஒருவருக்கு சுவாச நோய்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது, இது குறித்து 'லோக்கல் சர்கிள்ஸ்' என்ற சமூக வலைதளத்தில் சர்வே எடுக்கப்பட்டது. இதில் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களான குருகிராம், நொய்டா, பரிதாபாத், காஜியாபாத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 15,000 பேர் பங்கேற்றனர். அவர்கள் அளித்த பதில்களை தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப் பதாவது: டில்லியின் காற்றுத் தர குறியீடு அக்டோபரில் 400 - 500 என்ற மிக மோசமான நிலையிலேயே இருந்தது. தீபாவளி பட்டாசு புகை, விவசாய கழிவுகள் எரிப்பு இதற்கு முக்கிய காரணம். இது, உலக சுகாதார நிறுவனத்தின் வரம்பை விட, 10 மடங்கு அதிகம். இதன் விளைவாக, பெரும்பாலான குடும்பங்களில் மூச்சுத்திணறல், இருமல், தொண்டை வலி, கண் எரிச்சல், தலைவலி போன்ற காற்றுமாசு தொடர்பான நோய்கள் காணப்படுகின்றன. சர்வேயில் பங்கேற்றவர்களில், 17 சதவீதம் பேர் வீட்டில், நான்கு பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 25 சதவீதம் பேர் வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்டோர் நோயுற்று இருப்பதாகவும், 33 சதவீதம் பேர் வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதன்படி, 75 சதவீத வீடுகளில் ஒருவராவது நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2023ல் காற்று மாசுக்கு 17,188 பேர் பலி 'இன்ஸ்டிடியூட் பார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யூஷன்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2023ல் டில்லியில், 17,188 பேர் காற்று மாசால் உயிரிழந்துள்ளனர். இது மொத்த உயிரிழப்புகளில், 15 சதவீதம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காற்று மாசுக்கு அடுத்தப்படியாக உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக, 12.5 சதவீதம் பேர் இறந்துள்ளனர்.