ஆன்லைனில் ரூ.73.27 லட்சம் மோசடி போலீஸ் பிடியில் பண ஆசை காட்டிய பலே வாலிபர்
பாலக்காடு:வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 73.27 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, பாலக்காடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பகுதியை சேர்ந்தவர், ஆன்லைன் வாயிலாக ஷேர் டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறியவர்களிடம், 73.27 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக, பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணைக்கு பின், கோட்டயம் மாவட்டம் மாரிப்பள்ளி பகுதியை சேர்ந்த அபிஜித், 25, என்பவரை போலீசார், நேற்று கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது: 'டெலிகிராம்' ஆப் வாயிலாக, 2024 டிச., மாதம் இந்த மோசடி நடந்துள்ளது. புகார்தாரரை தொடர்பு கொண்டு, 'வீட்டிலிருந்த படியே ஷேர் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம்' என ஆசை வார்த்தை கூறி, டெபாசிட் தொகையாக, 73.27 லட்சம் ரூபாயை, அபிஜித் என்பவர் பெற்று, மோசடி செய்துள்ளார். ஆன்லைன் வாயிலாக பணத்தை பெற்று, அதில் ஒரு தொகையை கோட்டயம் கஞ்சிக்குழி பகுதியில் உள்ள அவரது மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். இவ்வழக்கு தவிர, தெலுங்கானா மாவட்டம் கம்மம், வளாஞ்சேரி, தானூர் ஆகிய ஸ்டேஷன்களில், ஆன்லைன் மோசடி வழக்குகள் அவர் மீது உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.