ஈ.டி., ஆபீசில் நடிகர் ஆஜர்
ஹைதராபாத்: ஆன்லைனில் பல்வேறு சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதில், பிரபல நடிகர்கள் இந்த சூதாட்ட செயலிகளை விளம்பரப் படுத்தியதால் பலர் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட நடிகர்,- நடிகையரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ல் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து ஹைதராபாதில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா நேற்று ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.