ஹோட்டல் தொழிலில் அசத்தும் பெண்
பெண்கள் மனது வைத்தால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. இன்றைய கால கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக, அனைத்து துறைகளிலும் பெண்கள் அசத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் ஆண்களால் மட்டுமே நடத்த முடியும் என்று கூறப்பட்ட ஹோட்டல் தொழில்களிலும் பெண்கள் இப்போது கொடி கட்டி பறக்க ஆரம்பித்து உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு பெண்ணை பற்றி பார்ப்போம். சமூக சேவை
கர்நாடகாவின் வடமாவட்டமான தார்வாடின் கலகட்டகியை சேர்ந்தவர் சினேகா, 30. எம்.எட்., முதுகலை பட்டதாரி. சிறு வயதில் இருந்தே ஆசிரியை வேலைக்கு செல்ல வேண்டும் என்பது இவரது ஆசை. அதிலும் அரசு பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்பதே லட்சியம். இதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.ஆனால் ஒரு கட்டத்தில் சுதேசி சிந்தனையாளர் ராஜிவ் தீட்சித் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உணவு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதனால் சமூக சேவைகளிலும் ஈடுபட்டார்.பின் வேலைக்காக யாரிடமும் கைகட்டி நிற்க கூடாது என்று முடிவு எடுத்து, ஹோட்டல் துவங்க முடிவு செய்தார். இவருக்கு கணவர் ஷம்புவின் ஆதரவும் இருந்தது. இருவரும் சேர்ந்து தார்வாடில் இருந்து, கலகட்டகி செல்லும் சாலையில் ஹோட்டல் துவங்கினர்.அந்த ஹோட்டலுக்கு, 'சுதேசி குதிரை' என்றும் பெயரிட்டனர். ஹோட்டலில் உணவு பொருட்கள் செய்ய பயன்படுத்தும், எண்ணெய் தரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். இதற்காக ஹோட்டலின் பக்கத்தில் ஒரு அறையில், இயற்கையான முறையில் எண்ணெய் தயாரிக்க ஆரம்பித்தனர். சூரியகாந்தி, வேர்க்கடலை மூலம் தயாரிக்கப்படும் எண்ணெயை அதிகளவு பயன்படுத்துகின்றனர். உணவு மட்டுமே
இதுகுறித்து சினேகா கூறியதாவது:மனிதர்களுக்கு வாழ்க்கையில், என்ன கிடைத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் வராது. ஆனால் போதும் என்று சொல்வது உணவே மட்டுமே. இதனால் ஹோட்டல் தொழில் ஆரம்பித்தேன். பெண்ணாக இருந்து கொண்டு, ஹோட்டல் நடத்த முடியுமா என்று, என்னிடம் உறவினர்கள் முதலில் கேட்டனர். ஆனால் குடும்பத்தினர், கணவர் ஆதரவு இருந்தது.இயற்கை முறையில் தயாரிக்கும் எண்ணெயை பயன்படுத்தி, உணவு சமைப்பதால், வாடிக்கையாளர்கள் உணவு நன்றாக உள்ளது என்று பாராட்டுகின்றனர். ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் எந்த சூழ்நிலையிலும், முகம் சுளித்து விட கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.பெண்கள் நினைத்தால் முடியாது என்று எதுவும் கிடையாது. ஆசிரியை ஆகி இருந்தால் கூட சந்தோஷமாக இருந்து இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் ஹோட்டல் தொழில் மூலம் தன்னிறைவு வாழ்க்கை வாழ்கிறேன்.இவவாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.