எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு படைப்பிரிவு: அமித் ஷா தகவல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜோத்பூர் : ''நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வகையில், எல்லை பகுதிகளுக்கென தனியாக, 'ட்ரோன்' எதிர்ப்பு படைப் பிரிவு உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.பி.எஸ்.எப்,, எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் 60வது நிறுவன நாள் விழா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று நடந்தது. மொத்தம், 2.65 லட்சம் வீரர்கள் உள்ள இந்த படைப் பிரிவு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பரிசுகள் வழங்கி அமித் ஷா பேசியதாவது: நம் நாடு, 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக விளங்குவதில், பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. எல்லைகள் பாதுகாப்பாக இருப்பது இந்த இலக்கை எட்டுவதை சாத்தியமாக்கும்.அந்த வகையில், எல்லையை பாதுகாக்க பல நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. எல்லையோர கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் இதில் ஒரு பகுதி. அதன்படியே, துடிப்புள்ள எல்லை கிராமங்கள் என்ற திட்டத்தின் வாயிலாக, எல்லையோர மக்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.அதுபோல, பாகிஸ்தான், வங்கதேசம் உடனான எல்லையில், ஒருங்கிணைந்த எல்லை நிர்வாக முறையை செயல்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதன் வாயிலாக எல்லையில் ஊடுருவலை தடுக்க முடியும்.இந்நிலையில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்துவது, எல்லை பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. எல்லையைத் தாண்டி வரும் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்காக, லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.இதன் வாயிலாக, முன்பு, 3 சதவீதமாக இருந்த ட்ரோன்களை கண்டறியும் திறன், தற்போது, 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. எல்லையை பாதுகாக்க, எல்லையோர பகுதிகளுக்கென, தனியாக ட்ரோன் எதிர்ப்பு முறையை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.அரசு புள்ளி விபரங்களின்படி, கடந்தாண்டு பாகிஸ்தான் எல்லையில், 110 ட்ரோன்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. இந்தாண்டில் இதுவரை 260 ட்ரோன்கள் சிக்கின.