| ADDED : செப் 22, 2024 06:04 PM
எட்டாவா: உ.பி.,யில் 10 வயது சிறுவன் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் கொலை முயற்சி மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜிதாரா நகரில் குழாய் அமைப்பதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இது தொடர்பாக இரு பிரிவினரும் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தான் 6வது படிக்கும் 10 வயது சிறுவன் உட்பட சிலர் மீது கலவரத்தில் ஈடுபடுதல், அமைதியை கெடுத்தல், வீடுகளை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, கிரிமினல் நோக்கம், பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கூறுகையில், போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். எங்களது புகாரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றனர் . இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்த அவர்கள், போலீசார் எந்தவித விசாரணையும் நடத்தாமல் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினர்.போலீசார் கூறுகையில், புகாரில் சிறுவனின் வயது குறிப்பிடப்படாததால், அவரின் பெயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உரிய விசாரணைக்கு பிறகு வழக்கில் இருந்து அவரின் பெயர் நீக்கப்படும் என்றனர்.மத்திய அரசின் புதிய சட்டப்படி, போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய பிறகு தான் வழக்குப்பதிய வேண்டும் எனக்கூறும் சட்ட வல்லுநர்கள், சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ததை வைத்து பார்க்கும் போது உண்மையை கண்டறியாமல் அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது எனவும் கூறினர்.