உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை

இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: ''இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது; அராஜகம் மட்டுமே விளையும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்துள்ளார்.அண்டை நாடுகளை போல, இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்று வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நிறுவப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின் போது, நிறுவன நாளை அந்த சங்கம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு நுாற்றாண்டு என்பதால், நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் களைகட்டி இருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் உரை இடம்பெறும். அந்த வகையில், இந்த ஆண்டு அதன் தலைவர் மோகன் பகவத் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:நம் நாடு, பிற நாடுகளுடன் நட்பாக இருக்க வேண்டும். அதே வேளையில் தேச பாதுகாப்பு என வந்துவிட்டால், அதற்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஒவ்வொரு கணமும் கவனமாகவும், கண்காணிப்புடனும், வலுவாகவும் இருக்க வேண்டும்.பஹல்காம் தாக்குதலுக்குப் பின், நம் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட நாடு எது; நட்பு பாராட்டும் நாடு எது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், மதத்தை கேட்டு, 26 இந்தியர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் மிகுந்த மனவலியை தந்தது. இந்த தாக்குதலுக்கு நம் அரசு தக்க பதிலடியை கொடுத்துவிட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் நம் ராணுவத்தின் வீரமும், சமூகத்தின் ஒற்றுமையும் வெளிப்படையாகவே தென்பட்டது.

கவனம் தேவை

அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது நல்லதல்ல. இலங்கை, வங்கதேசம், சமீபத்தில் நேபாளம் என நம் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை அனைத்தும் மக்களின் ஆவேசத்தால் நடந்தவை.இந்தியாவிலும் அப்படியொரு அசம்பாவிதத்தை நிகழ்த்த, நம் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சில சக்திகள் முயன்று வருகின்றன. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது. அராஜகத்தில் தான் முடிவடையும்.அசாதாரண சூழல், வெளிநாட்டு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும். இதனால், நாமும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.தலைவர்கள் மக்களிடம் இருந்து விலகிச் செல்வது அதிருப்தியை வளர்த்து விடும். வங்கதேசத்திலும், நேபாளத்திலும் நிகழ்ந்த சம்பவங்களால் யாருக்கும் எந்த பலனும் ஏற்படவில்லை.வன்முறை எழுச்சிகளால் மாற்றம் ஏற்படாது. அப்படி மாற்றம் ஏற்பட்டால், அது அராஜகத்தின் இலக்கணமாகிவிடும் என டாக்டர் அம்பேத்கர் தெரிவித்து இருக்கிறார். முற்போக்கான நாடுகள், ஒழுக்கமான வழிமுறைகள் வாயிலாக இலக்கை அடைய தவறும்போது, அதன் சொந்த பலம் ஓரம்கட்டப்படுகிறது. அண்டை நாடுகளில் குறிப்பாக நேபாளத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிப்பது, உள்நாட்டு பாதுகாப்பை கடந்து இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.ஏனெனில், கடந்த காலங்களில் அந்த பிராந்தியம் நம்முடையதாக இருந்தது. இந்த உணர்வுபூர்வமான பிணைப்பு தான் நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு, நம்மையும் கவலை அடையவைத்திருக்கிறது.

தீய அலை

தீய மற்றும் எதிர்ப்பு சித்தாந்தங்கள் கொண்ட புதிய அலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளில் சமூக உறுதியற்ற தன்மை மற்றும் சீர்குலைவைஏற்படுத்தியுள்ளது. இதனால், உலக நாடுகள் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய இவை துாண்டிவிடுகின்றன. இந்த அலை இந்தியாவிலும் பரவ முயற்சி எடுத்து வருகிறது. சமூக விரோத சக்திகளான நக்சல் இயக்கம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. அதற்கு காரணம் அந்த இயக்கத்தின் குரூரம். அதனால், சமூகம் அந்த இயக்கத்தை நிராகரித்து விட்டது. அரசும், பாதுகாப்பு படைகளும், அந்த இயக்கத்தை வேரோடு அகற்றும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

சுதேசி, தற்சார்பு முக்கியம்

அமெரிக்கா புதிய வரி கொள்கையை வகுத்துள்ளது. சொந்த நாட்டு மக்களின் நலனுக்காக அந்த கொள்கை வகுக்கப்பட்டாலும், ஒவ்வொருவரையும் பாதித்து வருகிறது. எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. ஒன்றுக்கொன்று சார்ந்து அல்லது துாதரக நம்பிக்கைகள் மூலம் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அதே சமயம் ஒரு நாட்டை சார்ந்து இருப்பது என்பது கட்டாயமாகக் கூடாது. நாம் தற்சார்புடன் வாழ்வது அவசியம். அரசியல், பொருளாதாரம் மற்றும் துாதரக ரீதியிலான உறவுகள் தேவைக்காக இருக்கக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். சுதேசி மற்றும் தற்சார்புக்கு மாற்றாக எதுவும் கிடையாது.நம் நாடு முழுதும் இளைஞர்களிடையே தேசிய உணர்வு, நம்பிக்கை, கலாசாரத்தின் மீது ஈடுபாடு வளர்ந்து வருகிறது. ஸ்வயம் சேவகர்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத்தினர், சமூக அமைப்புகள், தனிநபர்களும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு தன்னலமின்றி சேவையாற்ற முன் வருகின்றனர்.

வசுதைவ குடும்பகம்

ஹிந்து சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளார்ந்த சமூகம். பிரித்து பார்க்கும் மனநிலை ஹிந்து சமூகத்திடம் இல்லை. 'வசுதைவ குடும்பகம்' என்ற, 'உலகமே ஒரு குடும்பம்' என்ற சித்தாந்தத்தை காத்து வருவதும் ஹிந்து சமூகம் தான். தேசிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை மிகவும் முக்கியம். அதுவும் பன்மொழிகள், மதங்கள், வாழ்க்கை முறைகள் என நிறைய வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவுக்கு மிகவும் அவசியம்.அனைவரையும் வரவேற்பது தான் பாரத பாரம்பரியம். எனவே, பாரதத்திற்கு வரும் அனைவரையுமே அன்னியர்களாக நாம் பார்ப்பதில்லை. அதே சமயம் தனித்துவ அடையாளங்களால் பிரிவினை ஏற்பட்டு விடக் கூடாது. சமூகம், கலாசாரம், நாடு போன்ற மிகப் பெரிய அடையாளமே மிகவும் உயர்ந்தது.சட்டத்தை கையில் எடுப்பது, அற்ப விஷயங்களுக்காக வன்முறையில் ஈடுபடும் போக்கு ஆகியவை கண்டனத்துக்குரியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை துாண்டுவதற்காக வேண்டுமென்றே வலிமையை காட்டுவது அல்லது அப்படியொரு மோசமான சதி வலையில் வீழ்வது, நிச்சயம் தீய விளைவுகளையே ஏற்படுத்தும்.சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். உலகளாவிய பருவநிலை மாறுபாட்டால் இமயமலையில் மோசமான விளைவுகள் தீவிரமடைந்து இருக்கின்றன. அளவுக்கு அதிகமாக மழை பெய்கின்றன. நிலச்சரிவு, உருகும் பனிமலைகள் ஆகியவை சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ellar
அக் 03, 2025 15:11

இதோ அத்தோடு சேர்த்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டிலும் இதே பிரச்சனை தான் எனவே வல்லரசுகள் தங்கள் வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள போடும் மறைமுகத் திட்டங்களை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இளைஞர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும்


அப்பாவி
அக் 03, 2025 13:44

எல்லாத்துக்கும்.ஒரு பிட்டப் போட்டு வெச்சுருவோம்.


SUBBU,MADURAI
அக் 03, 2025 15:11

பல்லு போன காலத்திலும் இந்த அப்புசாமிக்கு லொள்ளு போக மாட்டேங்குது எப்போதும் நக்கல் நையாண்டி பண்ணுவதே இந்தாளுக்கு பொழப்பா போச்சு....


Rathna
அக் 03, 2025 11:24

ஆட்சிக்கு மக்கள் சக்தியால் வரமுடியாத கூட்டம் மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. டெல்லியில் ஒரு குடும்பம், மாநிலங்களில் குறு மன்னர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி 2014 முன்னால் உள்ள கூட்டு கொள்ளை குடும்ப வளர்ப்பு திட்டத்தை கொண்டு வர நினைக்கிறது. லடாக்கில், உத்தரபிரதேசத்தில் பரேலியில் நடைபெறும் போலீசை தாக்கும் திட்டங்கள், பொது சொத்துக்களை எரிப்பது, அப்பாவி மக்களை தாக்குவது இதற்கான ஒத்திகையே. ஆனால் தமிழ் நாட்டில் சினிமாகாரனுக்காக சீரியல் பெண்கள் அப்பாவி ஏழைகள் தன் இளம் வயது குழந்தைகளை பலி கொடுக்க வரிசையில் நிற்கின்றனர். அந்த அளவு மூளை மழுக்கடிக்க பட்டு இருக்கிறது.


ஆரூர் ரங்
அக் 03, 2025 10:33

சினிமா நட்சத்திரங்களை கூட்டி கெத்து காட்டத் தெரியவில்லை. முச்சந்திகளில் 200 க்கு ஆள் சேர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி முழக்கங்கள் எழுப்பத் தெரியவில்லை. பந்த் நடத்தி ஸ்தம்பிக்க வைக்கத் தெரியவில்லை. தியாகப் பட்டத்துக்கு அலைவதில்லை. குடும்ப வாரிசு அடிப்படையில் பதவி இல்லை. பிழைக்கத் தெரியாமல் எப்படித்தான் இயக்கத்தை வளர்த்தார்கள்?.


NALAM VIRUMBI
அக் 03, 2025 09:49

திமுக, மம்தா, ராகுல், கெஜ்ரிவால் போன்ற தேச விரோத சக்திகளை ஒரு 50 சதவீத மக்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சொல்லலாம். ஆனால் ஒட்டு மொத்த மக்களும் அவர்களின் அற்ப நோக்கங்களை உணர்ந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அப்போது தேசத்தில் 100 சதவிகிதம் பாதுகாப்பு உறுதி ஆகிவிடும்.


ஆரூர் ரங்
அக் 03, 2025 09:27

9000 சீக்கியர்கள் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த கூட்டம் பாரதத்திலும் அன்னியசக்திகளின் துணையுடன் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறது. அன்னிய நாடுகளிலும் நாட்டைக் கேவலப்படுத்தி பேசி பிரச்சாரத்தை நடத்துகிறார் ராகுல். RSS இருப்பதுதான் தேசத்துக்கு பாதுகாப்பு.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 03, 2025 09:24

செய்திகள் வருவதில்லையே >>>>


GMM
அக் 03, 2025 09:08

உலகமே ஒரு குடும்பம் என்ற சித்தாந்தத்தை காத்து வருவதும் ஹிந்து சமூகம் தான். பிற மத சமூகம் இதனை ஏற்க வேண்டும். ஒரு கை ஓசை எழாது. அமெரிக்கா, பிரிட்டிஷ், சீனா அந்நிய ஊடுருவல், போதனைகள் விளைவை அறிந்து விட்டன. இந்தியா இன்னும் சட்ட சிக்கலால் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளது. அந்நிய ஊடுருவல் சக்திகள் சட்டத்திற்கு சவால் விடும்போது நிலைமை கட்டுக்குள் இருக்காது என்பதை நீதிமான்கள் உணர வேண்டும்.


Svs Yaadum oore
அக் 03, 2025 08:48

உலகளாவிய பருவநிலை மாறுபாட்டால் இமயமலையில் மோசமான விளைவுகள் தீவிரமடைந்து இருக்கின்றனவாம் ....இங்குள்ள ஆற்றுமணல் அனைத்தும் கொள்ளை ....ஏரி குளம் குட்டை அனைத்தும் ஆக்கிரமிப்பு ....கன்யாகுமரியில்மலையை வெட்டி கேரளா ஏற்றுமதி...


Svs Yaadum oore
அக் 03, 2025 08:45

இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை.. வன்முறை எழுச்சி லடாக் பகுதியிலும் இது போல வன்முறை .... இது பற்றி எல்லாம் இங்கு எவன் கலவைப்பட்டான்? நடிகனை பார்க்க கூட்டத்தில் நசுங்கி 41 நபர்கள் சாவு .....இந்த பிரச்சனைகள் தீர்க்க நடிகன் வருவார் .....அவர்தான் விடி வெள்ளி ...கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று சினிமாக்காரனுங்களை மேடையில் ஏற்றி சொல்ல வைத்து தமிழ் நாட்டில் சினிமா மூலம் கல்வியை கட்சியை வளர்த்த திராவிடம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை