உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனமாற்றம்! நாடு முழுதும் அடுத்தடுத்து சரணடையும் நக்சல்கள்: மத்திய அரசின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி

மனமாற்றம்! நாடு முழுதும் அடுத்தடுத்து சரணடையும் நக்சல்கள்: மத்திய அரசின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரியாபந்த்: நம் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து, நாடு முழுதும் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரணடைந்து வருவது அதிகரித்துள்ளது. நக்சல்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சமீபத்தில் சரணடைந்த நக்சல் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ், வன்முறையை கைவிட்டு போலீசில் சரணடையும்படி நக்சல்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சத்தீஸ்கர், ஒடிஷா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், நக்சல்களின் ஆதிக்கம் உள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி, நாசவேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2026 மார்ச் 31ம் தேதிக்குள், நாட்டில் இருந்து நக்சல்களை முற்றிலுமாக ஒழிக்க மத்திய பா.ஜ., அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கில், மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய ஆயுதப்படையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நம் பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கைகளால், நக்சல் பிடியில் இருந்த கிராமங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. நக்சல்கள் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளன. அதிரடி நடவடிக்கை நம் பாதுகாப்பு படையினரின் இடைவிடாத அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து, நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாடு முழுதும் சரணடைந்து வருவது, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், நக்சல் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ், தன் ஆதரவாளர்கள் 60 பேருடன் கடந்த 16ல், போலீசாரிடம் சரணடைந்தார். நக்சல்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட அவரது தலைக்கு மட்டும், 6 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 17ல், சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில், நக்சல் மூத்த தலைவர் ரூபேஷ், ஆதரவாளர்கள் 210 பேருடன் சரணடைந்தார். இது தவிர, சுக்மா மாவட்டத்தில், 28 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைந்த நக்சல்கள், தங்களது ஆயுதங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 300க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. அமைதி வாழ்க்கை இந்நிலையில், மஹாராஷ்டிராவில் சரணடைந்த நக்சல் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ், வன்முறையை கைவிட்டு அமைதி வாழ்க்கைக்கு திரும்பும்படியும், தேசிய பாதுகாப்புக்கான பொது நீரோட்டத்தில் இணையும்படியும், நக்சல்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது ஒப்புதலுடன், உதாந்தி பகுதி குழுவின் நக்சல் தலைவர் சுனில், ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கர் - -ஒடிஷா எல்லையில் உள்ள கரியாபந்த் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இந்த குழு செயல்பட்டு வருகிறது. கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது: பாதுகாப்பு படையினரின் அழுத்தம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில், ஆயுத பிரசாரம் இனி சாத்தியமில்லை என்பதை வேணுகோபால் ராவ் ஒப்புக்கொண்டுள்ளார். நக்சல் அமைப்பில் குறைபாடு இருப்பதாகவும், நம் போராட்டத்திறன் பலவீனமடைந்து விட்டதாகவும், பல வாய்ப்புகளை தவறவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீசாரிடம் சரணடையும்படி அவர் வலியுறுத்தி உள்ளார். வேணுகோபால் ராவ், ரூபேஷ் ஆகியோரின் முடிவுக்கு உதாந்தி பகுதி குழு ஆதரவு அளிக்கிறது. கோப்ரா, சினாபாலி, சோனாபேடா - -தரம்பந்தா- - கோலிபாதர் மற்றும் சீதநாதி பகுதிகளில் உள்ள பிரிவுகளும் இதை பின்பற்ற வேண்டும். நாம் ஏற்கனவே முக்கியமான நபர்களை இழந்து விட்டோம். எனவே, போலீசில் சரணடைந்து அமைதியான இயக்கங்கள் மூலம் மக்களின் பிரச்னைகளை எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது. போலீஸ் வரவேற்பு இது குறித்து, கரியாபந்த் மாவட்ட எஸ்.பி., ராகேச்சா கூறியதாவது: இந்த கடிதத்தை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். இது ஒரு, 'பாசிட்டிவ்'வான முயற்சி. பல்வேறு பகுதிகளில் செயல்படும் நக்சல்கள், விரைவில் சரணடையும்படி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள், தயக்கமின்றி நேரடியாக என்னை அணுகலாம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சேர்வதை நாங்கள் உறுதி செய்வோம். மேலும், அவர்களின் மறுவாழ்வுக்காக உதவுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N Sasikumar Yadhav
அக் 19, 2025 12:27

சீன ஆதரவு கம்யூனிஸ நக்சல்களை அழித்ததை போல விஞ்ஞானரீதியான ஊழல்வாத கும்பல்களையும் அழித்து அவனுங்க ஆட்டய போட்டு வைத்திருக்கிற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து மத்தியரசின் கஜானாவில் சேர்த்து முதல்ல கடன்களை அடைக்க வேண்டும்


Barakat Ali
அக் 19, 2025 09:18

சீனப்பின்னணி உள்ள இயக்கம் நக்சல் இயக்கம் .... இதை காங்கிரசால் இத்தனை ஆண்டுகளாகச் சாதிக்க முடியாமல் போனது வேதனை ..... சீனாவுக்குப் பயந்து முயற்சியைக் கைவிட்டிருக்கலாம் ....


பாலாஜி
அக் 19, 2025 08:33

அழிவுகள் போதும் என நக்சலைட்டுகள் உணர்ந்து சரணடைகின்றனர்.


Ramesh Sargam
அக் 19, 2025 08:23

சிறப்பு. இதேபோன்று ஊழல்வாதிகளும் சரண் அடையவேண்டும். அதாவது இனிமேல் நாங்கள் ஊழல் செய்யமாட்டோம் என்று உறுதிமொழி எடுக்கவேண்டும்.


Varadarajan Nagarajan
அக் 19, 2025 07:17

பல ஆண்டுகளாக வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பல மலைவாழ் கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தன நக்சல் இயக்கங்கள். அவர்களால் பல பாதுகாப்பு படைவீரர்களை நாம் இழந்துள்ளோம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப மத்திய அரசு கடந்தகாலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு பலன் கிட்டவில்லை. நமது இரும்பு மனிதர் உள்துறை அமைச்சரின் தற்போதைய தீவிர நடவடிக்கையால் தீர்வு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்கள் முழுவதுமாக ஒழித்துக் கட்டப்படுவார்கள் என நாள்குறித்து நடவடிக்கையெடுக்கின்றார். மிகவும் பாராட்டுக்கள். சரணடைபவர்கள் வேறுவித தீவிரவாத செயலிகளில் ஈடுபடாமல் இருப்பதையும் சிலகாலம் கண்காணிப்பதும் அவசியம்


Kasimani Baskaran
அக் 19, 2025 07:08

நல்ல மாற்றம். உழைப்பை நம்பி வாழலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் போதுமானது.


N.Purushothaman
அக் 19, 2025 06:04

பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்கள் ...நக்சகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து அமைதியாக வாழ வேண்டும் ...


Venkat
அக் 19, 2025 04:51

This is a big achievement by Amit shah ji under Modi Government.


Thravisham
அக் 19, 2025 04:45

ஊழல் பிரிவினைவாதிகள் / தேசத்துரோகி கம்மிகள் / சீனாவினால் வளர்க்கப்பட்ட நக்ஸல்பாரி நச்சு இயக்கம் முடிவுக்கு வருவது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இது இரும்புமனிதர் அமித்ஷாவுக்கு ஓர் மணிமகுடம். தற்குறி சிதம்பரம் போன்றோருக்கு சாவுமணி.


புதிய வீடியோ