புதுடில்லி: பீஹார் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ள நிலையில், நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக, அரசியல் கட்சிகள் தயாராகி வரும் சூழலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.இந்த பணிக்காக ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து படிவங்களை வழங்கி வருகின்றனர். அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து வரும் 25ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவால், பல்வேறு தரப்பினரின் ஓட்டுரிமை பறிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், குடியுரிமையை நிரூபிப்பதற்கான 11 ஆவணங்களுடன் ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை சேர்க்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.இந்த வழக்கு, வரும் 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்களை, வாக்காளர்களுக்கு வினியோகிக்கும் பணி ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டதாகவும், அதில் 80.11 சதவீத வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்திருப்பதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் வாக்காளர்களின் ஆர்வத்தை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நாடு முழுதும் மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.முதற்கட்டமாக, தங்கள் மாநிலங்களில் கடைசியாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது வெளியிட்ட வாக்காளர் பட்டியலை, சம்பந்தப்பட்ட இணையதளங்களில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பதிவேற்றி வருகின்றனர்.இதன்படி, உத்தராகண்டில் 20-06 மற்றும் டில்லியில் 2008ல் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலை, அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகள் இணையதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.பீஹாரைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலமான அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்த சூழலில், நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கபில் சிபல் புகார்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கையில் உள்ள கைப்பாவையாக, பொம்மையாக தலைமை தேர்தல் கமிஷன் உள்ளது. பீஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, அரசியலமைப்புக்கு முரணானது.குடியுரிமை தொடர்பான பிரச்னைகளை முடிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை. அதன் சுதந்திரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒவ்வொரு தலைமை தேர்தல் கமிஷனரும், தனக்கு முன்பிருந்த கமிஷனர்களைவிட, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாட்டினர் அதிகம்
பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில், அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், மியான்மரைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர்கள், தங்கள் பெயரில் ஆதார் அட்டை, குடியுரிமை சான்றிதழ், ரேஷன் கார்டு போன்றவற்றை சட்டவிரோதமாக வாங்கி வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'போலி வாக்காளர்கள் தொடர்பான விசாரணை ஆக., 1 - 30ம் தேதி வரை நடத்தப்படும். இதில், சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஆவணங்கள் பெற்று வைத்திருப்பது உறுதியானால், அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் செப்., 30ல் வெளியிடப்படும்' என, தெரிவித்தனர்.