உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ரூ.29 கோடி நிதி இருந்தும் காற்று மாசை கண்டுகொள்ளாத டில்லி மாநகராட்சி

 ரூ.29 கோடி நிதி இருந்தும் காற்று மாசை கண்டுகொள்ளாத டில்லி மாநகராட்சி

புதுடில்லி: 'டில்லி மாநகராட்சியிடம், 29 கோடி ரூபாய் நிதியிருந்தும், காற்று மாசு பிரச்னையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆண்டுதோறும் அக்., - ஜன., வரை காற்று மாசு அபாய கட்டத்துக்கு செல்லும். இந்த ஆண்டும், கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துள்ளது. இங்கு, கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசு குறியீடு, 200க்கு மேல் பதிவானால் ஆபத்து என, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், டில்லியில் பல இடங்களில் 400க்கும் மேல் பதிவாகி வருகிறது. காற்று மாசை தடுக்க டில்லி மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டில்லி மாநகராட்சியின் தேசிய துாய்மை காற்று திட்டத்துக்கான, 29 கோடி ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமித் குப்தா, டில்லி மாநகராட்சியில் துாய்மை பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லி மாநகராட்சியில் தேசிய துாய்மை காற்று திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. சாலைகளை சுத்தம் செய்தல், காற்று தரக் கட்டுப்பாட்டு மையங்களை பராமரித்தல், பசுமை பூங்காக்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2023 - 24ம் நிதியாண்டின் துவக்கத்தில், டில்லி மாநகராட்சியின் நிதி, 26.6 கோடி ரூபாயாக இருந்தது. தேசிய துாய்மைகாற்று திட்டத்தின் கீழ் கூடுதலாக, 8.93 கோடி ரூபாயை மாநகராட்சி பெற்றது. இதையடுத்து, மொத்த நிதி, 35.3 கோடி ரூபாயாக உயர்ந்தது. அந்த ஆண்டில், 5.42 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதையடுத்து, நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டு துவக்கத்தில், 30.11 கோடி ரூபாய் இருப்பு இருந்தது. இந்த நிதியாண்டில், கூடுதலாக, 75 லட்சம் ரூபாய் வட்டி கிடைத்தது. இதனால், மொத்த நிதி, 30.8 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த மார்ச்சில், 1.34 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் டில்லி மாநகராட்சி வசம், 29.5 கோடி ரூபாய் இருந்தது. இது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு மாநகராட்சி சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கையிருப்பாக 29 கோடி ரூபாய் வரை நிதியிருந்தும், காற்று மாசை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கைவசம் உள்ள தொகையை வைத்து, காற்று மாசை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sridhar
நவ 15, 2025 16:29

நோய் நாடி நோய் முதல் நாடி என்ற தமிழ் பழமொழுக்கு ஏற்ப வேறுங்கும் வராத அந்த மாசு டெல்லிக்கு மட்டும் எப்படி வருதுன்னு எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் யோசிச்சாங்கன்னா பிரச்சனை எப்பவோ தீர்த்திருக்கும். எப்போ வோட்டு அரசியல் உள்ள வந்ததோ, அன்னைக்கே நல்ல விஷயங்கள் நடப்பது நின்னுடுச்சு. இதுல எல்லா கட்சிகளும் ஒரே மாதிரிதான்


Rathna
நவ 15, 2025 13:00

பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கோதுமை விவசாய கழிவை வயலில் நெருப்பூட்டுவதே அதற்கு காரணம். விவசாயி என்ற பெயரில் பல நூறு ஏக்கர்கள் உரிமையுள்ள பணக்காரர்கள் செய்யும் வேலையை அரசாங்கமோ, நீதிமன்றோமோ அடக்க தைரியம் இல்லாத நிலைமை உள்ளது. AAP கட்சி டெல்லி பிஜேபி அரசை, அரசியல் பழிவாங்கும் நோக்கில் இதை பஞ்சாபில் செய்கிறது. இதனால் அப்பாவி மக்களின் உயிர் வாழும் காலம் 20 ஆண்டுகளை வரை டெல்லியில் குறையலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2025 10:28

தேவையான நிதி ஒரு பொருட்டே அல்ல .... காற்று மாசைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ..... பழைய வாகனங்களைத் தடை செய்வது, நச்சுப்புகையை, ஆபத்தான வேதியியல் நச்சுக்களை, வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளை மூடுவது போன்ற அம்சங்களும் கவனிக்கப்பட வேண்டும் .செய்தால் வேலைவாய்ப்பு பறிபோகும் .... ஆகவே சொல்வது எளிது ..... செய்வது கடினம் ....


Thirumal Kumaresan
நவ 15, 2025 09:41

இதற்கு தேவை இல்லாத காரணங்களை சொல்வதை விட்டு தேவையான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்


vbs manian
நவ 15, 2025 09:40

காற்று மாசு இன்றைய இயந்திர உலகின் கட்டாயம். இப்போதுள்ள இயற்கை நிகழ்வு. திரும்ப முடியாது. டோக்கியோ நியூயார்க் peaking போன்ற நகரங்களில் பயங்கர காற்று மாசு. ஒன்றும் செய்ய முடியவில்லை. வாழ பழகி விட்டார்கள். வளர்ச்சி க்கு கொடுக்கும் விலை.


Kalyanaraman
நவ 15, 2025 08:12

நான்கு நாட்கள் பட்டாசு வெடித்ததற்கே காற்று இந்த அளவுக்கு மாசு அடைந்து இருக்கிறது என்றால் இஸ்ரேல் - ஹமாஸ் போரிலும், ரஷ்யா - உக்ரைன் போரிலும் எவ்வளவு மாசு ஏற்பட்டிருக்கும் / ஏற்பட்டுக் கொண்டிருக்கும். உண்மையிலேயே மாசு பற்றிய அக்கறை இருந்தால் ஐரோப்பிய நாடுகள் சண்டையை உடனடியாக நிறுத்தலாமே. எல்லா சட்டமும் இந்தியாவுக்கு மட்டும்தானா??¿?


Senthoora
நவ 15, 2025 09:44

ரஷிய உக்ரைன் போர், காசா குண்டுவீச்சு இதனால் மாசு தீங்கு, ஐரோப்பாவை விட அமெரிக்க கனடா நாடுகளுக்கு தான் பாதிப்பு, அண்மையில் பணிக்கட்டி கனடாவில் கொட்டும்போது சாம்பல் நிறத்தில் கொட்டியிருக்கு, குண்டு வீச்சு புகை மண்டலம் மேகங்களில் படர்ந்து குளிர்காலத்தில் பனிக்கட்டியாக விழுந்ததுதான் காரணமாம், அடுத்து டிரம்ப் ஐயாவின் மாளிகையில் விழுந்தால்தான் எதாவது பண்ணுவார்.


Kasimani Baskaran
நவ 15, 2025 06:00

29 கோடி என்பது ஓரிரு வாகனங்களுக்கு கூட போதாது. சீனா போல பல காற்று வடிகட்டிகளை நிறுவ வேண்டும். நிறைய மரங்களை நட வேண்டும். மரங்கள் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்களை கொடுக்கும்.


புதிய வீடியோ