ஹரியானா மாநிலத்தின் உதவியை கோரும் டில்லி
புதுடில்லி:ஹரியானா மாநிலத்தின் ஜாரோடா காலன் மற்றும் நஜப்கார் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, ஹரியானா மாநில அரசின் உதவியை, டில்லி அரசு கோரியுள்ளது. ஹரியானாவின் முங்கேஷ்பூர் ஓடையில், 50 அடி துாரத்திற்கு உடைப்பு ஏற்பட்டு, பெருகி ஓடிய வெள்ள நீர் அருகில் உள்ள, டில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாரோடா காலன் மற்றும் நஜப்கார் பகுதிகள் மற்றும் கீதாஞ்சலி என்கிளேவ் என்ற பகுதிக்குள் சென்றது. மேலும், டில்லியின் துவாரகா பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்தனர். இதை அறிந்த டில்லி நீர்வளத்துறை மற்றும் வெள்ள நீர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று வெள்ள நீரை கட்டுப்படுத்தும் ணிகளை மேற்கொண்டனர். தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட அந்த பணிகளை நிரந்தரமாக செய்து முடிக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என ஹரியானா மாநில அரசு வசம் டில்லி மாநில அரசு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.