சென்னை: சென்னையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்ற பேச்சை நம்பி மருத்துவர் ஒருவர் ரூ.76 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரங்கள், அறிவிப்புகள் நாள்தோறும் குவிந்து வருகின்றன. இந்த அறிவிப்புகளில் குறிப்பிட்டு உள்ள வாக்குறுதிகள் எந்தளவுக்கு உண்மை என்பதில் இன்னமும் ஏராளமான சந்தேகங்கள் இருந்தாலும் அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை என்னவோ குறையவில்லை.அண்மையில், சென்னையில் அரசு மருத்துவர் ஒருவர் இப்படியான ஆன்லைன் வர்த்தகத்தை நம்பி ரூ.76 லட்சத்தை தொலைத்திருக்கிறார். இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னையில் பிரபல அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கணேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). யுடியூப் ஒன்றில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான பயிற்சி வகுப்புகள், ஆலோசனைகள் நடத்தப்படுவதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். தொடக்கத்தில் அதை அலட்சியப்படுத்திய அவர், பின்னாளில் ஒரு வித ஆர்வத்துடன் அந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.தினமும் புதுப்புது தகவல்கள் என்று கூறி அவருக்கு யுடியூப் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள மருத்துவரின் செல்போன் எண்ணை, வாட்ஸ் அப் குழு ஒன்றில் உறுப்பினராக அதன் அட்மின் திவாகர் சிங் என்ற பெயரில் உள்ளவர் சேர்த்துள்ளார். அந்த குழுவில் இடம்பெற்று உள்ள பலரும் பெரிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் என வசதி படைத்தவர்களாக இருப்பதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளனர்.பயிற்சியில் சேர்ந்த தொடக்க நாட்களில் ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன, அதில் முதலீடு எப்படி செய்வது, எந்த பங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிட்டும் என்று அடிப்படையான விஷயங்கள் பாடங்களாக சொல்லிக் கொடுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி விவரங்கள் வாட்ஸ் அப்பில் குறிப்பிடப்படும் போது, அதில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள பலரும், நாங்கள் முதலீடு செய்தோம், ஏராளமான பணம் வருமானமாக கிடைத்ததாக கூறி உள்ளனர். அதற்கான ஆவணங்களாக தங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை, வங்கி கணக்கு எண், சேமிப்பு உள்ளிட்ட விவரங்களை ஸ்கீரின் ஷாட்(screen shot) ஆக எடுத்து போட்டோக்களாக பதிவிட்டு வந்துள்ளனர். தினசரி வகுப்புகளில் பலரும் தாங்கள் அடைந்த லாபத்தை பற்றி விவரங்களை தெரிவித்த வண்ணம் இருந்திருக்கின்றனர்.வாட்ஸ் அப் குழுவில் இருந்ததால் மருத்துவரும் அந்த தகவல்களை தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டே வந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம் என்ற உந்துதலுக்கு மருத்துவர் வந்துள்ளதை மோப்பம் பிடித்த பயிற்றுநர்கள், பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறி உள்ளனர். அவ்வாறு செய்தால் 30 சதவீதம் கூடுதல் வருமானத்துடன் லட்சக்கணக்கில் லாபம் வந்து சேரும் என்று ஆசை வார்த்தையும் கூறி இருக்கின்றனர். எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என்ற பட்டியலை அவருக்கு பகிர்ந்து தூண்டில் போட்டுள்ளனர். பண வரவு செலவுக்கு என்று பிரத்யேகமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தினர் அவருக்கு கணக்கு ஒன்றையும் தொடங்கி, அதில் முதலீடு செய்ய அறிவுறுத்தி உள்ளனர். தொடக்கத்தில் லட்சம், பின்னர் கோடியில் பணம் கொட்டும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய மருத்துவரும் அக்டோபர் மாதத்தின் முதல் 3 வாரங்களில் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பணம் கட்டி வந்துள்ளார். அக்டோபர் 22ம் தேதி முதலீட்டு தொகைக்கான லாபத்தை (கிட்டத்தட்ட ரூ.50 லட்சம்) தமது கணக்கில் இருந்து எடுக்கலாம் என்று மருத்துவர் முயற்சித்தபோது, பலனளிக்கவில்லை. பணம் எடுப்பதற்கு ரூ.50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட ஏதோ பொறி தட்டி உள்ளது. ஒட்டுமொத்தமாக அவர் செலுத்திய ரூ.76.50 லட்சமும் போய்விட்டது, தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மருத்துவர், உடனடியாக சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் இறங்கிய போது, இந்த முறைகேட்டில் ஈடுபட்டது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், அந்த குறிப்பிட்ட வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள் அனைத்தும் வட மாநிலத்தில் உள்ள வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர்.இது குறித்து போலீசார் கூறி உள்ளதாவது: மருத்துவரின் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். பணம் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2 மணிநேரத்தில் அந்த பணம் எடுக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் எவ்வித பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில் இதேபோன்ற சம்பவம் ஒன்று புகாராக எங்களிடம் வந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர் ரூ.1.18 கோடியை இழந்துள்ளார். அவர் பணம் கட்டியவுடன் நாடு முழுவதும் உள்ள 250 வங்கிகளில் அந்த பணம் அடுத்த சில மணி நேரங்களில் எடுக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவோர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்த வண்ணம் வங்கி கணக்குகளை இயக்கி வருகின்றனர் என்பதை கண்டுபிடித்துள்ளோம். எனவே ஆன்லைன் வர்த்தகம் என்பதில் சிக்கி யாரும் பணத்தை இழக்க வேண்டாம். இவ்வாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.