பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு மத்திய அரசு ஒப்புதல்
புதுடில்லி, ஆக. 12– நாடு முழுதும், 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ராஜ்யசபா நேற்று கூடியதும், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக அளித்த பதில்: நாடு முழுதும் 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விரைவில் புழக்கத்தில் விடப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுடன், இந்த ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். இதற்கான கொள்முதல் பணிகள், ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், புழக்கத்திற்கு வரும் சரியான காலவரையறையை துல்லியமாக கூற முடியாது. அதற்கான செலவையும் தற்போது கணக்கிட முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.