உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் துப்பாக்கி சண்டை: 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் துப்பாக்கி சண்டை: 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

தண்டேவாடா: சத்தீஸ்கரில், பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தார் மண்டலத்துக்கு உட்பட்ட தண்டேவாடா மற்றும் நாராயண்பூர் மாவட்ட எல்லை வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருடன், மத்திய ரிசர்வ் படையினர் நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்தத் தாக்குதலில், மாவட்ட ரிசர்வ் படையின் ஹெட் கான்ஸ்டபிள் சானு கரம் வீர மரணமடைந்தார். சத்தீஸ்கரில், கடந்த ஆண்டில் மட்டும் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 219 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ