ஹரியானாவில் கடையில் ஏற்பட்ட தீ; பலமணி நேரம் போராடிய தீயணைப்புத்துறை
குருகிராம்: ஹரியானாவில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.இதுபற்றிய விவரம் வருமாறு; குருகிராமில் உள்ள ஷோரூம் ஒன்றில் பின்னிரவு 2.30 மணியளவில் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.உடனடியாக அவர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினர். தீ பல அடி உயரத்திற்கு எரிந்ததால் கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினர் சிரமம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, கூடுதலாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இதில் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், அம்பாலாவில் உள்ள கிடங்கு ஒன்றில் தீப்பிடித்தது. அதை கட்டுப்படுத்திய பின்னர், குர்கானில் உள்ள ஷோரூமில் தீப்பிடித்துள்ளதாக தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயைக் கட்டுப்படுத்திவிட்டோம். இருப்பினும், கடை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எப்படி தீப்பிடித்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர். இதனிடையே தீபாவளி நாளில் மட்டும் டில்லி தீயணைப்பு நிலையத்துக்கு மொத்தம் 170 தொலைபேசி அழைப்புகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.