ஹோட்டல் உணவில் எச்சில் துப்பும் விஷமிகள் உத்தரகண்டில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு
டேராடூன், உத்தரகண்ட் ஹோட்டல்களில் எச்சில் துப்பிய உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற விஷமத்தனங்களில் ஈடுபடுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சிறப்பு வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், முசோரிக்கு வந்த சுற்றுலா பயணியருக்கு பழச்சாறில் எச்சில் துப்பி பரிமாறிய இரு ஹோட்டல் ஊழியர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், டேராடூனைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், ரொட்டிக்கு மாவு பிசையும் போது, அதில் எச்சில் துப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இரு சம்பவங்களும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.“இது போன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்,” என, முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ள, மாநில போலீஸ் டி.ஜி.பி., அபினவ் குமார் மற்றும் மாநில சுகாதாரத் துறை தனித்தனியாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.அதன் விபரம்:சாலையோர உணவகங்கள், தள்ளுவண்டிக் கடைகளில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, உள்ளூர் உணவுப் பிரிவினரை மாவட்ட போலீசார் பயன்படுத்த வேண்டும்ஹோட்டல்களில் பணியாளர்களை நியமிக்கும்போது, அவர்களின் பின்னணி குறித்து, 100 சதவீதம் உறுதிசெய்த பின் பணியமர்த்த வேண்டும். ஹோட்டல் சமையலறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்இதுபோன்ற புகார்கள் மீது, போலீசார் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ஹோட்டல்களில் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும்உணவில் அசுத்தம் ஏற்படுத்துவது மத, இன, மொழி ரீதியாக எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினால், பகைமையை ஊக்குவித்தல், மத நம்பிக்கையை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்குற்றவாளிகளுக்கு 25,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மதரசாக்களில் சமஸ்கிருதம்
உத்தரகண்டில், இஸ்லாமிய கல்வியை போதிக்கும் 416 மதரசாக்கள் உள்ளன. இவை, உத்தரகண்ட் மதரசா கல்வி வாரியத்தின்கீழ் பதிவு பெற்று செயல்படுகின்றன. இங்கு, 70,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த மதரசாக்களில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க மதரசா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாநில சமஸ்கிருத துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சமஸ்கிருத துறை அனுமதி அளித்த பின், 416 மதரசாக்களிலும் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக கற்பிக்கப்பட உள்ளதாக உத்தரகண்ட் மதரசா கல்வி வாரிய தலைவர் முப்தி ஷமூன் குவாஸ்மி தெரிவித்துள்ளார்.