உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கல்வி கடன்

மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கல்வி கடன்

பாட்னா : 'பீஹாரில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடையும் மாணவ, மாணவியர் உயர் கல்வியை தொடர, மாநில அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்' என, முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் , பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இம்மாநிலத்தில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் உயர் கல்வியை தொடர, 4 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கும் திட்டம், 2016ல் நடைமுறைக்கு வந்தது. மாணவர்களுக்கு 4 சதவீதமும், மாணவியர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 1 சதவீதம் வட்டியுடன் இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு வட்டி யில்லா கடன் வழங்கப் படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதேபோல், 2 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவோர், திருப்பி செலுத்தும் கால அவகாசம், 60 மாதங்களில் இருந்து 84 மாதங்களாகவும், 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை திருப்பி செலுத்த, 84 மாதங்களில் இருந்து 120 மாதங்களாகவும் கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை