பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 23 பேர் கைது; களையெடுத்த ஜம்மு காஷ்மீர் போலீஸ்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 23 பேரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டர்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 23 பேரை பொது பாதுகாப்பு சட்டத்தின் ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை பூஞ்ச், உதம்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஜெயில்களில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருந்துள்ளன. இது குறித்து போலீசார் கூறுகையில், ' கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் பெற்ற பிறகும் அவர்கள் திருந்தவில்லை. பொது ஒழுங்கை சீர்குலைத்தல், குற்றவியல் மற்றும் தேசத்திற்கு எதிரான நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,' என்றனர்.