ஜெ.பி., அருங்காட்சியகத்துக்கு செல்ல அகிலேஷுக்கு அனுமதி மறுப்பால் பதற்றம்
லக்னோ, உத்தர பிரதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளையொட்டி, லக்னோவில் உள்ள அவர் பெயரிலான அருங்காட்சியகத்துக்கு சென்று முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்தவிருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்து அவரது வீட்டு முன் தடுப்புகளை அமைத்தனர்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகிறது.சர்வதேச மையம்சோஷலிசவாதியும், சுதந்திர போராட்ட வீரருமான ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லக்னோவில் ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் உள்ள அருங்காட்சியகத்துக்கு, அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் இரவு சென்றார்.அப்போது, அதன் நுழைவாயில் இரும்பு தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதனால், உள்ளே செல்ல முடியாமல் தவித்த அகிலேஷ் யாதவ், மாநில பா.ஜ., அரசு சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிப்பதாக குற்றஞ்சாட்டினார்.'அருங்காட்சியகத்தில் கட்டுமானப் பொருட்கள் திட்டமிடப்படாத முறையில் வைக்கப்பட்டு உள்ளதால், அங்கு வருகை தருவது ஆபத்தானது; பாதுகாப்பற்றது' என, லக்னோ மேம்பாட்டு ஆணையம், அகிலேஷ் யாதவுக்கு கடிதம் எழுதியிருந்தது.இந்நிலையில், ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளான நேற்று, அவரது அருங்காட்சியகத்துக்கு அகிலேஷ் யாதவ் சென்று விடக்கூடும் என்பதால், லக்னோவின் விக்ரமாதித்யா மார்க்கில் உள்ள அவரது வீட்டின் முன், போலீசார், அதிரடிப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். மேலும் வீட்டை சுற்றி தடுப்புகளை அமைத்தனர்.இதையறிந்த நுாற்றுக்கணக்கான சமாஜ்வாதி தொண்டர்கள், அகிலேஷ் யாதவ் வீட்டின் முன் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.மாலை அணிவிப்புபோலீசார், லக்னோ நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயபிரகாஷ் நாராயணின் மார்பளவு சிலைக்கு, அகிலேஷ் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின், அகிலேஷ் யாதவ் பேசியதாவது:அனைத்து நல்ல காரியங்களையும் பா.ஜ., தடுத்து நிறுத்துகிறது. அருங்காட்சியகத்தை விற்பனை செய்ய பா.ஜ., அரசு துடிக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜ., தொடர்ந்து அவமதிக்கிறது. நான் வெளியே செல்லாதபடி வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்துள்ளனர். இந்த தடுப்புகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது.இவ்வாறு அவர் பேசினார்.நல்ல குணமே இல்லையா? நம் நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் பா.ஜ., மதிப்பளிக்கிறது; உரிய மரியாதை செய்கிறது. ஜெயபிரகாஷ் நாராயண் எளிமையின் அடையாளம். அவரிடமிருந்த ஒரு குணம் கூட அகிலேஷ் போன்றவர்களிடம் இல்லை. நீங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறீர்கள். அகிலேஷின் நடத்தை, ஜெயபிரகாஷ் நாராயணின் கொள்கைகளுக்கு எதிரானது. அலோக் அவஸ்தி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ., நிதீஷுக்கு நல்ல சான்ஸ்!ஜெயபிரகாஷ் நாராயணுக்கு மரியாதை செலுத்துவதை பா.ஜ., தடுத்து நிறுத்தியுள்ளது. அவரது இயக்கத்தில் இருந்தே அரசியல் பயணத்தை ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமார் துவக்கினார். தற்போது அவருக்கே பா.ஜ., அவமரியாதை செய்துள்ளது. பா.ஜ.,வுக்கான ஆதரவை அவர் திரும்பப் பெற வேண்டும். அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி