நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய லோக்சபாவில் தீர்மானம்! : சபாநாயகர் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பண மூட்டை விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய லோக்சபாவில் எம்.பி.,க்கள் அளித்த தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். இது குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அர்விந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். டில்லியில் உள்ள அவரது வீட்டில், கடந்த மார்ச் 14-ல் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் போது, ஓர் அறையில் இருந்து பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. விபத்து நடந்த போது, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்தார். மேலும், இது குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டார். பரிந்துரை உச்ச நீதிமன்ற உள் விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பதவி விலகும்படி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் முரண்டு பிடித்தார். இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும்படி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யவும், பார்லிமென்டில் அதற்கான தீர்மானத்தை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.,க்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அவர்களும் ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், அமளிக்கு பின் மதியம் 12:00 மணிக்கு லோக்சபா நேற்று கூடிய போது, சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது: பண மூட்டை விவகாரத்தில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் 21ல், என்னிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உட்பட 146 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதில், 'நீதித் துறையில் ஒரு சாதாரண மனிதன் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடித்தளமே, குற்றமற்ற தன்மையும், அறிவுசார் நேர்மையும் தான். ஊழலை சுட்டிக்காட்டும் இந்த வழக்கின் உண்மைத்தன்மையானது, அரசியலமைப்பின் பிரிவு 124, பிரிவு 217 மற்றும் 218ன் அம்சங்களை மீறுவதாக உள்ளது. முன்மொழிவு எனவே, தீவிர விசாரணைக்கு உரிய தகுதியான வழக்கு இது. இது போன்ற விஷயத்தில், பார்லிமென்ட் ஒரே குரலில் பேச வேண்டும். 'எனவே, தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதியிடம் ஒரு பிரதிநிதித்துவத்தை சமர்ப்பிக்க, இந்த தீர்மானத்தை முன்மொழிகிறோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முன்மொழிவு, லோக்சபா விதிகளின்படி இருப்பதால் அங்கீகரிக்கிறேன். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படுகிறது. அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி அர்விந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இந்த குழுவின் அறிக்கையின்படி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'மிண்டா தேவி - 124 நாட் அவுட்'; சொதப்பலில் முடிந்த காங்., போராட்டம்
பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், நேற்று சபை அலுவல்கள் துவங்கும் முன், மகர் துவார் பகுதியில், வழக்கம் போல கூடினர். காங்., மூத்த தலைவர் சோனியா உட்பட பலரும் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பல எம்.பி.,க்கள் 'டி சர்ட்' அணிந்து வந்தனர். அதன் முன்பக்கத்தில், ஒரு பெண் புகைப்படமும், அதன் கீழ், 'மிண்டா தேவி' என்றும் எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில், '124 நாட் அவுட்' என எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக பிரியங்கா உள்ளிட்ட பெண் எம்.பி.,க்கள் இந்த டி சர்ட்டை அணிந்து வந்தனர். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பீஹாரைச் சேர்ந்த முதல்முறை வாக்காளராக மிண்டா தேவியின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது. இவரது வயது 124 என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலகிலேயே 115 வயதுடைய நபர் தான் மிகவும் வயதானவர் என, கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், அவரைக் காட்டிலும் 9 வயது மூத்தவராக மிண்டா தேவி இருக்கிறாரா என்ற கேள்வியை காங்., எழுப்புகிறது. மேலும், மிண்டா தேவி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவரது பெயரை வைத்து கள்ள ஓட்டுப்போட்டிருக்க வேண்டும் என, அக்கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இதை குறிக்கும் விதமாகவே, மிண்டா தேவியின் பெயரையும், வயதையும் குறிப்பிட்டு, டி சர்ட் அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக வயது தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அந்த வாக்காளரின் வயது, 35 தான். இது சரி செய்யப்படும்' என, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.