முரிட்கே முகாம் அழிப்பு; லஷ்கர் பயங்கரவாதி ஒப்புதல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத் :'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலின்போது பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் முரிட்கே முகாமை நம் வீரர்கள் தாக்கி அழித்ததாக லஷ்கர் அமைப்பின் தளபதி காசிம் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் ஏப்ரல் 22ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு மே 7ல் நம் படையினர் அளித்த பதிலடியில் பாகிஸ்தானின் பஹவல்பூர், பஞ்சாப் மாகாணத்தின் முரிட்கே, கோட்லி உட்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் முக்கிய தளபதியான மசூத் இலியாஷ் காஷ்மீரி, பஹவல்பூரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் முகாம்கள் அழிக்கப்பட்டதை சமீபத்தில் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலில் முரிட்கேவில் இருந்த லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைமையகமான மர்காஸ் மசூதி முற்றிலும் அழிக்கப்பட்டதாக லஷ்கர் தளபதி காசிம் தெரிவித்துள்ளார். இந்த மசூதியில் முஜாகிதின் மற்றும் லஷ்கர் மாணவர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக காசிம் வெளியிட்ட வீடியோவில், 'இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட முரிட்கே மர்காஸ் தைபா மசூதியின் இடிபாடுகள் முன் நிற்கிறேன். கடவுளின் அருளால் இந்த மசூதி முன்பு இருந்ததை விட பெரிதாக மீண்டும் கட்டப்படும்' என, தெரிவித்துள்ளார்.