உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என மற்றவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது

நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என மற்றவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது

மும்பை: ''நாட்டின் நலன் மற்றும் உலக நன்மைகளை கவனித்தே, எந்த ஒரு விஷயத்திலும் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம். இதில் மற்றவர்கள் நிர்ப்பந்திக்க அனுமதிக்க மாட்டோம்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சுவாமி பெயரிலான தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.

பல விடைகள்

பொது தலைமை, சமூகத் தலைமை, மனித நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் பங்கேற்கவில்லை. அவருடைய பேச்சு அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியுள்ளதாவது:நம் நாட்டு மீதான உணர்வுகள் இல்லாமல், பாரதம் வளர்ச்சி அடைய முடியாது. தற்போதைய தாராளமய உலகில், தொழில்நுட்பமும், பாரம்பரியமும் இணைந்திருக்க வேண்டும்.உலகெங்கும் மோசமான பழக்க வழக்கங்கள், நெருக்குதலுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, பருவநிலை பிரச்னைகள் போன்றவை நிலவும் நிலையில், இந்தியாவின் பாரம்பரியத்தில் இருந்து இவற்றுக்கு பல விடைகளை பெற முடியும். இதை உலகம் புரிந்து கொள்வதற்கு முன், முதலில் நாம் நம் நாட்டின் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நம் பாரம்பரியம், கலாசாரம் குறித்த பெருமை நமக்கு இருக்க வேண்டும்.கடந்த பல ஆண்டுகளாக, நாம் நம் பாரம்பரியத்தை மறந்து, வெளியில் இருந்து இறக்குமதி செய்தவற்றை போற்றி வந்தோம். அது வசதியாக இருப்பதாக நினைத்தோம். ஆனால், நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் தான் சிறந்தது என்பதை புரிந்து கொண்டோம். கடந்த, 10 ஆண்டுகளில், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.நம் நாகரிகத்தால், தனிச்சிறப்பான நாடாக இந்தியா விளங்குகிறது. அதனால் தான், நம் நாட்டின் கலாசாரம் உலக நாடுகளை ஈர்த்துள்ளது. நம் நலனை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் நலனையும் பார்ப்பதே, நம் பாரம்பரியம்.

குழப்பம் கூடாது

உலக அளவிலான சில பிரச்னைகளில் நாம் நடுநிலை வகிக்கிறோம். நடுநிலை மற்றும் சுதந்திரம் குறித்து குழப்பிக் கொள்ளக் கூடாது. நம் நாட்டுக்கு எது சிறந்ததோ அதையே நாங்கள் செய்கிறோம். இதில், உலக நலனையும் பார்க்கிறோம். என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதில் மற்றவர்கள் நம்மை நிர்ப்பந்திக்க எப்போதும் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை