உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிசம்பரில் மேலும் பல சிவிங்கி புலிகளை இந்தியா கொண்டு வர திட்டம்

டிசம்பரில் மேலும் பல சிவிங்கி புலிகளை இந்தியா கொண்டு வர திட்டம்

புதுடில்லி : தென்னாப்ரிக்க நாடுகளான கென்யா, போட்ஸ்வானா, நமீபியாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட சிவிங்கி புலிகளை இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுஉள்ளது. நம் நாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன சிவிங்கி புலிகளை, மீண்டும் கொண்டு வரும் வகையில், சிவிங்கி புலி மறுவாழ்வு திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2022ல் நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளும், தென்னாப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும், மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டன.

இடமாற்றம்

இவற்றில், மோசமான உடல்நிலை உட்பட பல்வேறு காரணங்களால் ஒன்பது சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதேபோல், இங்கு பிறந்த 26 சிவிங்கி புலி குட்டிகளில், 10 குட்டிகள் இறந்தன. தற்போது, 16 குட்டி சிவிங்கி புலிகளும், 11 பெரிய சிவிங்கி புலிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், மூன்று சிவிங்கி புலிகள், மத்திய பிரதேசத்தின் காந்திசாகர் சரணாலயத்துக்கு இந்தாண்டு துவக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கென்யா, போட்ஸ்வானா, நமீபியா நாடுகளில் இருந்து மேலும் பல சிவிங்கி புலிகளை, நம் நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து வனத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ம.பி.,யின் குனோவில், சிவிங்கி புலிகளின் உயிர் வாழ்வு விகிதம் முதல் ஆண்டில் 70 சதவீதமாக இருந்தது. இரண்டாவது அண்டில், இது 85.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், சிவிங்கி புலி குட்டிகளின் உயிர் வாழும் விகிதம் 61 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது, உலகளாவிய தரநிலையான 40 சதவீதத்தை விட அதிகம். ஆகையால், கென்யா, போட்ஸ்வானா, நமீபியா நாடுகளில் இருந்து மேலும் பல சிவிங்கி புலிகளை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அவற்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் 8 முதல் -10 சிவிங்கி புலிகள் அடங்கிய ஒரு தொகுப்பை அனுப்ப இருக்கின்றன.

அதிகரிப்பு

வரும் டிசம்பர் மாதத்திற்குள், நமீபியா அல்லது போட்ஸ்வானாவில் இருந்து குறைந்தது ஒரு தொகுப்பாவது இந்தியா வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கென்யாவில் இருந்து ஒரு தொகுதி அடுத்த ஆண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், எதிர்காலத்தில் அவற்றை விடுவிக்க மேலும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள நவுரத்வி வனவிலங்கு சரணாலயம். மற்றொன்று குஜராத்தில் உள்ள பன்னி புல்வெளிகள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை