உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத, 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளை ஊக்குவித்ததாக, 'கூகுள், மெட்டா' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிஉள்ளது.'ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் - 365' உள்ளிட்ட சூதாட்ட செயலிகளை வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த, 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி, பிரபல நடிகர்களும் நடித்திருந்தனர். இதை நம்பி விளையாடிய பலர், 3 கோடி ரூபாய் வரை இழந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்த, பிரபலங்கள் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீஸ் பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவாரகொண்டா, ராணா டகுபதி உட்பட திரை பிரபலங்கள், 'இன்ஸ்டா, யு டியூப்' சமூக ஊடக பிரபலங்கள் என, 29 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்களை ஆய்வு செய்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான, 'கூகுள், மெட்டா'வையும் அமலாக்கத் துறை இணைத்துள்ளது. இந்த நிறுவனங்கள், விளம்பரங்கள் வாயிலாக சூதாட்ட செயலிகள் பயனர்களை சென்றடைய உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளை தரவிறக்கம் செய்யும், 'ஆப் ஸ்டோர்'களில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்றும் அமலாக்கத் துறை கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக, 'கூகுள், மெட்டா' நிறுவன அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன், நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jack
ஜூலை 20, 2025 07:45

டாஸ்மாக் ரெய்டு நடந்து ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டது இப்போ பேச்சு மூச்சையே காணோம் 21 வயதுக்கு குறைவானோர் மது வாங்குவதும் அவர்களுக்கு விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம்.. கடைகளில் காமெரா கிடையாது வயதுக்கான அடையாள அட்டை கேட்பதில்லை பில் கொடுப்பதில்லை ..இந்த லட்சணத்தில் அரசாங்கமே நடத்தும் நிறுவனத்தில் இந்த லட்சணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை