உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ரூ.50 கோடி தங்கம் பறிமுதல்

ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ரூ.50 கோடி தங்கம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கர்நாடகாவில், கைது செய்யப்பட்ட காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திரா தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட வழக்கில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 கிலோ தங்கக் கட்டிகளை அமலாக்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சித்ரதுர்கா தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான வீரேந்திரா, 50, தன் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பண மோசடி வழக்கு பதிந்த அமலாக்கத் துறையினர், ஆகஸ்டில், காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திராவை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகெரே என்ற பகுதியில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள இரண்டு லாக்கர்களில் இருந்து, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், தங்கத்தின் உரிமையாளர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கில், 21 கிலோ தங்கக் கட்டிகள், தங்கம், வெள்ளி நகைகள் என, 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கனவே பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை