UPDATED : அக் 24, 2024 09:26 PM | ADDED : அக் 24, 2024 09:06 PM
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் வரும் 11ம் தேதி பதவியேற்று கொள்கிறார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஓய்.சந்திரசூட் வரும் நவ.,10ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு, அவருக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து,தனக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார்.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 51வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்,சந்திரசூட் ஓய்வு பெறும் மறுநாள்(நவ.,11) அன்று பதவியேற்க உள்ளார்.* 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் இவர் பிறந்தார். டில்லி பல்கலையில் சட்டம் பயின்றார்.* இவரது தந்தை டில்லி ஐகோர்ட்டின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கண்ணா டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றினார்.* இவர் 1983ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.* கடந்த 2004ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.* டில்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.* ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.* இவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.