ஜம்முவில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் பதற்றம் நிலவியது.ஜம்மு - காஷ்மீரில் சர்வதேச எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் சமீபகாலமாக அதிகரித்ததை அடுத்து, நம் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.எல்லையோர கிராமங்களில் ராணுவ வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் ஜோக்வான் என்ற இடத்தில் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது, அங்கு மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.பின், தப்பியோடிய பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை சில மணி நேரம் நீடித்தது. இதில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.தாக்குதல் நடந்த பகுதி களில், போலீசார் உதவியுடன் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 24ம் தேதி, பாரமுல்லா மாவட்டம் போட்டா பத்ரியில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், ராணுவ வாகனங்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.