பாலக்காடு,“மலப்புரம் தங்க கடத்தல் குறித்து குற்றஞ்சாட்டும் முதல்வர் பினராயி விஜயன், இதற்கு தக்க விளக்கம் அளிக்க வேண்டும்,” என, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு அகதேத்தறை சபரி ஆசிரம நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:மலப்புரம், கரிப்பூர் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை தேசத்துரோக செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர் என, ஆங்கில நாளிதழ் ஒன்றில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதற்கு, முதல்வர் தக்க விளக்கம் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வரே குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. முதல்வர் கூறியது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் விளக்கம்அளிக்க வேண்டும். தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை கேட்க உள்ளேன்.தங்க கடத்தல் எத்தனை காலமாக நடக்கிறது என்பது குறித்து, அரசுக்கும் முதல்வருக்கும் நன்கு தெரியும்.இந்த விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் அங்கவஸ்திரத்தில் தீ!
கேரள மாநிலம், பாலக்காடு அகதேத்தறை அருகே உள்ள சபரி ஆசிரமத்துக்கு மஹாத்மா காந்தி அவரது மனைவி கஸ்துாரிபாய் உடன் வந்துள்ளார். இந்த ஆசிரமத்தின் நுாற்றாண்டு விழா, நேற்று நிறைவடைந்தது. இதில் பங்கேற்க வந்த அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான், ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது, மஹாத்மா காந்தியின் படத்திற்கு முன்பு மலர் துாவி வணங்கும்போது, அருகில் இருந்த குத்துவிளக்கில் அவரது அங்கவஸ்திரம் பட்டு தீப்பற்றியது. இதை அருகில் இருந்தோர் கவனித்து, உடனே தீயை அணைத்தனர்; கவர்னர் காயமின்றி தப்பினார்.