மேலும் செய்திகள்
சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!
10-Feb-2025
கடந்த 55 ஆண்டுகளாக, தோல் பாவை கூத்து கலையை நடத்தி வரும், கன்னியாகுமரியைச் சேர்ந்த 75 வயதான லட்சுமி அம்மா, அவரது உறவினர் முத்துலிங்கம்:லட்சுமி அம்மா: என் கணவரின் குடும்பம், ஆறு தலைமுறைகளாக தோல் பாவை கூத்து கட்டுபவர்கள். அவர் வாயிலாகத் தான் கதை சொல்லுதல், பாவை தயாரித்தல், ஓவியம் வரைதல், பக்கவாத்தியம் போன்றவற்றை கற்றுக் கொண்டேன். என் கணவர், 'சாமிக்கு என்ன மரியாதை கொடுப்போமோ, அதே மரியாதையை இந்த பொம்மைகளுக்கும் கொடுக்க வேண்டும்' என்று சொல்வார்.இந்த பொம்மைகள் தான் எங்களுக்கு படி அளக்குற சாமி. கணவரின் மறைவுக்கு பின், இதையெல்லாம் பூட்டி வைக்க மனதில்லை. அதனால், அவரோட அண்ணன், தம்பி குடும்பத்துடன் இணைந்து ஊர் ஊராகச் சென்று, தோல் பாவை கூத்து நடத்தி வருகிறேன். முத்துலிங்கம்: தோல் பாவை கூத்தில் நான் ஆறாம் தலைமுறை. நான் படித்தது பி.ஏ., வரலாறு. கலையில் ஆர்வம் வந்து முழு நேர கலைஞனாக மாறி விட்டேன். எனக்கு, 15 வகையான நாட்டுப்புறக் கலைகள் தெரியும்.தோல் பாவை கூத்து, மராட்டியர்கள் காலத்தில் தமிழகத்திற்கு வந்தது என்று சொல்வர். தஞ்சாவூர் அரண்மனையில் மன்னர்களுக்காக நடத்தப்பட்ட கலை. ஆரம்பத்தில் தோல் பாவை கூத்து வாயிலாக, புராண கதைகளை மக்களுக்கு சொல்லி வந்தோம். தலைமுறை மாற மாற, மக்களுக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது.அதனால், காலத்துக்கு தகுந்த மாதிரி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு, தேர்தல் விழிப்புணர்வு, தடுப்பூசி விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்து விட்டோம்.இந்த பாவைகளை எல்லாம் ஆட்டுத் தோலில் செய்கிறோம். தோலை காய வைத்து, அதில் எங்களுக்கு தேவையான படத்தை வரைவோம். பாவையோட தலை, கை, கால், அசைவுக்காக உறுப்புகளை தனியா வெட்டி எடுப்போம். உறுப்புகளையும், உடம்பையும் ஒண்ணா சேர்த்து தைப்போம். இப்படி பாவையை செய்து முடித்ததும், அதில் மூங்கில் குச்சியை இணைத்து, பாவையை அசைக்க வேண்டியது தான்.தோல் பாவை கூத்தில் ஒரு முக்கிய விஷயம் குரல் வளம் தான். ஒருவரே, 30 வகையான குரலில் பேசுவோம். திரை கட்டி விளக்கு வெளிச்சத்தில் கூத்து கட்டுகிறோம். எங்கள் பொம்மைகள் மேல் வெளிச்சம் பட்டால் தான், எங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கும். ஒரு நிகழ்ச்சி நடத்த ஆறு பேர் செல்வோம்; 5,000 ரூபாய் தருவர். அது கூட ஆண்டு முழுக்க கிடைத்தால் பரவாயில்லை. ஆனால், ஆண்டுக்கு 10 நிகழ்ச்சி கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. பாவைகளுக்கு பசிக்காது; ஆனால், அதை நம்பி இருக்கும் எங்களுக்கு பசிக்குமே! சுவைத்து பார்த்து பிடித்தால் மட்டுமே வாங்கச் சொல்வோம்!
ஊட்டியில், 'ஜெய்ஸ் கிங் ஸ்டார் சாக்லேட்' கடை நடத்தும் விவேக்: ஊட்டியில், பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தில், முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என் தாத்தா தம்பு ஸ்வாமி. சாக்லேட் தயாரிப்பின் அனைத்து நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து, 1942ல் தனியாக சாக்லேட் கடையை துவக்கினார். அவருக்குப் பின், என் அப்பா பொறுப்புகளை ஏற்றார். அதன்பின் நான் என, மூன்று தலைமுறைகளாக வெற்றிகரமான கடையாக இயங்கி வருகிறது. சாக்லேட் என்றாலே கொண்டாட்டம் என்று அர்த்தம். அன்பை வெளிப்படுத்தும் பரிசுப் பொருளாகவும், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பது சாக்லேட்தான். இதில், காலத்துக்கு ஏற்ப புதுமைகளை புகுத்தலாம். ஆனால் தரத்திலும், சுவையிலும் எந்த சூழலிலும் சமரசமே செய்யக்கூடாது என்பதுதான் எங்களின் தாரக மந்திரம். எங்களுக்கு என தனித்துவமான தயாரிப்புகளை, இன்றும் செய்து வருகிறோம். புரூட் அண்டு நட்ஸ், மேங்கோ, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, ஜிஞ்சரி, சில்லி, பான், சுகர் ப்ரீ, ஒயிட், பார்க் என கிட்டத்தட்ட 50 வகையான சாக்லேட்டுகளை தயாரித்து விற்பனை செய்கிறோம்.இயற்கையான பொருட்களையே தயாரிப்புக்கு பயன்படுத்துகிறோம். எதிலும் எசன்ஸ் கலப்பதில்லை. இந்த தொழிலில் கொக்கோ தான் அனைத்தையும் தீர்மானிக்கும். மூலப்பொருளான கொக்கோ கொட்டைகளை வாங்குவதில், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஆரம்பத்தில், இலங்கையில் இருந்துகூட கொள்முதல் செய்தோம். தற்போது, கேரளாவிலேயே தரமான கொட்டைகள் கிடைக்கின்றன.கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். சேல்ஸ் கவுன்டரைக் காட்டிலும், தயாரிப்பு யூனிட்டில்தான் அதிக நேரம் இருக்கிறேன். தாத்தா காலத்து வாடிக்கையாளர்களின் வாரிசுகள் இன்றைக்கும் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.கடைக்குள் யார் நுழைந்தாலும், சுவைத்துப் பார்க்க சாம்பிள் கொடுப்பது வழக்கம். சுவைத்துப் பார்த்து பிடித்தால் மட்டுமே வாங்கச் சொல்வோம். வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து தொழில் செய்தால், எங்கிருந்தாலும் தேடி வருவர்.தரத்தில் குறை வராமல் பார்த்துக் கொள்வதால்தான், தலைமுறைகளை கடந்தும் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடிகிறது. புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடிகிறது. எங்கள் கடையில் 30 பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர்.கொக்கோ விலை உயர்வு காரணமாக, சாக்லேட் விலை சற்று உயர்ந்திருக்கிறது. 1 கிலோ சாக்லேட் 2,200 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்கிறோம்.
10-Feb-2025