வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாம் எங்கே செல்கிறோம். அடுத்த தலைமுறை மிகவும் கஷ்டபட போகிறார்கள். கலாச்சார சீரழிவு
மும்பை: மேகாலயாவில் தேனிலவு சென்று மனைவியே, கணவனை கொலை செய்த வழக்கில் பரபரப்பு ஓய்வதற்குள், மஹாராஷ்டிர மாநிலத்திலும் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மஹாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் தாலுகாவில் வசித்து வந்தவர், அனில் தனாஜி லோகண்டே, 54. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள். இருவரும் திருமணம் முடிந்து சென்றுவிட்டதால், அனில் தனிமையில் இருந்து வந்துள்ளார். அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டவர், சதாரா மாவட்டத்தின் வாடி கிராமத்தைச் சேர்ந்த ராதிகா பால்கிருஷ்ணா இங்க்லேவால், 24, என்ற பெண்ணை கடந்த மாதம் 17ம் தேதி மறுமணம் செய்து கொண்டார். திருமணமாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில், அனிலுக்கும், ராதிகாவுக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அதன்பின், அனில் துாங்கச் சென்றார். இந்த சண்டையால் மன உளைச்சலுக்கு ஆளான ராதிகா, நள்ளிரவில் எழுந்து, துாங்கிக் கொண்டிருந்த கணவரை கோடரியால் சரமாரியாக வெட்டினார். இதில், அவர் துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக உறவினர்களுக்கு ராதிகா தகவல் தெரிவித்தார். அவர்கள் போலீசில் தெரிவிக்க, போலீசார் ராதிகாவை கைது செய்து விசாரணையை துவக்கினர்.தன்னைவிட வயது அதிகமான அனில் லோகண்டே வற்புறுத்தி தன்னை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரத்தில் கொன்றதாக ராதிகா தெரிவித்துள்ளார். காதலித்தவனை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்ததால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் ரகுவன்ஷி என்ற பெண், காதலனுடன் சேர்ந்து தன் கணவரை தேனிலவுக்கு சென்ற இடத்தில் வைத்து தீர்த்துக்கட்டினார். இதேபோன்று, வற்புறுத்தி இரண்டாவது திருமணம் செய்த ஆத்திரத்தில், கணவரை கோடரியால் வெட்டிக்கொன்றதாக மீண்டும் ஒரு இளம்பெண் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் எங்கே செல்கிறோம். அடுத்த தலைமுறை மிகவும் கஷ்டபட போகிறார்கள். கலாச்சார சீரழிவு