ஆமதாபாத்: மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக, குஜராத்தில், 20 ஆற்றுப்பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், 12ல் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் கடனுதவியுடன், மஹாராஷ்டிராவின் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் இடையே, நாட்டின் முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை, தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மேற்கொள்கிறது. குஜராத்தில் 353 கி.மீ., துாரம், மஹாராஷ்டிராவில், 156 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக மும்பை, தானே, வாபி, சூரத் உள்ளிட்ட 12 இடங்களில் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தால், மும்பை - ஆமதாபாத் இடையேயான பயண நேரம், 8 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறையும். புல்லட் ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடக்கும் நிலையில், 2026-ல் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.புல்லட் ரயில் திட்டத்துக்காக, குஜராத்தில் மொத்தம், 20 ஆறுகளில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 12 ஆற்றுப்பாலங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கரேரா ஆற்றின் மீது கட்டப்பட்ட, 120 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் கட்டுமானப் பணிகள், அக்., 29ல் நிறைவடைந்தன. இதுவரை 12 ஆற்றுப்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.குஜராத்தின் வாபி - சூரத் இடையே, பூர்ணா, மின்தோலா, அம்பிகா, அவுரங்கா, கோலக், காவேரி மற்றும் வெங்கனியா ஆறுகளிலும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.