உள்ளூர் செய்திகள்

பாட புத்தகங்களை தாண்டிய வண்ண கலைப்பயணம் அரசு பள்ளி மாணவிகளின் அசத்தல் ஓவிய கண்காட்சி

வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அரசு பள்ளி மாணவிகளின் ஓவிய கண்காட்சி என்றதும் மனதில் ஒரே உற்சாகம். அதே உற்சாகத்துடன் பள்ளியில் ஒரு விசிட்... ஓவிய கண்காட்சி என்பதால் அன்று பள்ளி பள்ளியாகவே இல்லை…அந்தப் பள்ளி வளாகம் கலை பேசிக் கொண்டிருந்தது… பள்ளி முழுதும் கலைக்கூடமாகவும் கனவுக் கூடமாக மாறியிருந்தது.மாணவிகள் மெதுவாக தங்களின் ஓவிய உலகத்துக்குள் நுழைந்து தங்களது படைப்புகளை பார்வையாளர்களுக்கு நுணுக்கமாக விளக்கி கொண்டிருந்தனர்.சுவரெங்கும் தொங்கியிருந்த ஓவியங்கள், மேசைகளில் அடுக்கி வைக்கப்பட்ட கலைப் படைப்புகள் என, அவை எல்லாம் வெறும் வரையப்பட்ட கோடுகள் அல்லாமல்; மாணவிகளின் மனதுக்குள் ஒளிந்திருந்த எண்ணங்கள், வண்ணங்களாக வார்த்தைகளாக வெளிவந்து கொண்டு இருந்தன. பாடப்புத்தகங்களின் வரம்பைத் தாண்டி, வாழ்க்கையைப் பேசும் கலைக்குள் மாணவிகள் காலடி வைத்திருந்தனர். ஆங்கிலம், சமூக அறிவியல் என்ற அத்தியாயங்களுக்கு அப்பால், சமூகம், சூழல், மனிதநேயம் ஆகியவை ஓவியங்களின் மொழியாக மாறியிருந்தது.பென்சிலின் மென்மையான கோடுகளில் குழந்தை மனம் துளிர்த்தது. பேனாவின் தைரியமான வரிகளில் கருத்துகள் குரல் பெற்றன. ஆயில் பெயிண்ட்களின் ஆழமான வண்ணங்களில், ஒரு தலைமுறையின் கனவுகள் அடுக்கடுக்காய் பதிந்திருந்தன.பிளாஸ்டிக் தவிர்ப்பை நினைவூட்டும் ஓவியம் மனசாட்சியை மெதுவாகத் தட்டியது.மழைநீர் சேமிப்பைச் சொன்ன ஓவியம் எதிர்காலத்தைப் பற்றிய கவலையைக் காட்டியது. விவசாயத்தைப் பேசும் படைப்புகள் மண்ணோடு மனிதன் கொண்ட உறவை நினைவுபடுத்தின.இவை அனைத்தையும் பார்த்த போது, இவர்கள் இன்னும் பள்ளி மாணவிகள்தானா என்ற ஆச்சரியம் பார்வையாளர்களின் முகங்களில் பிரதிபலித்தது.கடந்த ஓராண்டாக, 72 மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய 320க்கும் மேற்பட்ட படைப்புகள் ஒரு தனிப்பட்ட சாதனையாக அல்ல; ஒரு கூட்டு கனவாக அந்த அரங்கில் நின்றன.கண்காட்சியைத் திறந்து வைத்த சிறப்பு அழைப்பாளர்கள், மாணவிகளின் படைப்புகளை பார்த்தபோது, வார்த்தைகளை விட மவுனமான பாராட்டே அதிகமாக இருந்தது.அந்த மவுனமே அவர்களுக்கான மிகப் பெரிய ஊக்கமாக மாறியது.ஓரமாக நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நுண்கலை ஆசிரியர் வேலாயுதத்தின் கண்களில், ஒரு ஆசிரியரின் திருப்தி தெளிவாகப் பளிச்சிட்டது. “மாணவிகளின் மனச்சோர்வை கலைக்கவும், அவர்களுக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிக்கொண்டு வரவும் இந்தக் கண்காட்சி ஒரு வழி” என்ற அவரது சொற்களை, மொத்த அரங்கமும் ஆமோதித்து கைதட்டலை பரிசாக அள்ளிவிட்டது.இந்த ஓவிய கண்காட்சி மாணவிகள் தங்களைத் தாங்களே கண்டறிந்த கலைப் பயணமாகவும் அமைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்