அரசு மருத்துவ கல்லுாரியில் தடையில்லா மின்சாரம் பெற நடவடிக்கை அவசியம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துவக்கி 13 ஆண்டுகளாகியும், தடையில்லா மின்சாரம் பெற தனியாக 'பீடர்' அமைத்து மின்வசதி செய்து தர அரசு முன் வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.சிவகங்கை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை துவங்கி 13 ஆண்டுகளாகின்றன. கொரோனா காலத்தில் சிறப்பான சிகிச்சை, அதிக பிரசவங்கள் நடத்தி சிறந்த மருத்துவமனையாக தரம் உயர்ந்துள்ளது.இங்குள்ள உள்நோயாளிகள் பிரிவில் 800 பேர், தினமும் வெளிநோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆப்பரேஷன் தியேட்டர், மகப்பேறு மையம், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை மையம், டயாலிசிஸ் மையம் செயல்படுகின்றன. இதற்காக வெண்டிலேட்டர், ஏ.சி., போன்ற வசதிகளை நோயாளிகளுக்கு செய்து தர வேண்டும். இதற்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தேவைப்படுகிறது.அரசு மருத்துவமனைக்கு தேவையான மின்சாரம் வழங்க, போதிய டிரான்ஸ்பார்மர் வசதி செய்துள்ளனர். ஆனால், தடையில்லா மின்சாரம் பெற, சிவகங்கை திருப்புத்துார் ரோட்டில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து தனியாக மின்சாரத்தை கொண்டு செல்லும் 'பீடர்' வசதி இல்லை.தனி 'பீடர்'க்கு விண்ணப்பம், பணம் மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, தற்போது சிவகங்கை மற்றும் மானாமதுரையில் இருந்து தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறோம். இருப்பினும் அவர்களுக்கென தனி 'பீடர்' அமைக்க வேண்டும் என மருத்துவகல்லுாரி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆன்லைனில் விண்ணப்பித்து, அதற்கான செலவு தொகையை கட்டுமாறு தெரிவித்துள்ளோம். தனியாக பீடர் லைன் கொண்டு செல்ல தோராயமாக ஒரு கி.மீ., துாரத்திற்கு ரூ.12 லட்சம் வரை மருத்துவமனை நிர்வாகம் கட்ட வேண்டியது வரும், என்றனர்.தனி 'பீடரில்' மின்சாரம் பெற முயற்சி மருத்துவ கல்லுாரி டீன் சீனிவாசன் கூறியதாவது: தனியாக பீடர் லைன் எடுத்து வர விண்ணப்பம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கென தனியாக நிதி ஒதுக்கி வைத்துள்ளோம். விண்ணப்பத்துடன் தனி பீடர் அமைப்பதற்கான தொகையை கட்டி, விரைவில் தனி மின் இணைப்பு பெறுவோம், என்றார்.