சோதனைகளை சாதனையாக மாற்றிய தன்னம்பிக்கை! அனுபவம் பகிரும் கவிநயா நாட்டியாலயா நிறுவனர் மேனகா
“திருப்பூர், ஒரு தொழில் நகரம்: அங்கு கலைகளுக்கு இடமிருக்காது… என்பது தான், 20 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் மீதான கலைத்துறை சார்ந்தோரின் பார்வையாக இருந்தது.அந்த அடையாளத்தை தகர்த்தெறிந்து, திருப்பூரில் பரதக்கலையை வேரூன்ற செய்ய எதிர்கொண்ட சவால்கள் ஏராளம்” என்கிறார், திருப்பூர், கவிநயா நாட்டியாலயா நடனப்பள்ளி நிறுவனர் மேனகா.நடன பயிற்சியாளர்கள், கலைஞர்களை உருவாக்கியுள்ள அவர், தன் கலைப்பயணம் குறித்து கூறியதாவது:குடும்ப சூழல் மற்றும் சமூகத்தின் பார்வையில், நடனத்தின் மீதுள்ள என் ஆர்வத்துக்கு, பெரியளவில் ஊக்குவிப்பு இல்லாமல் போனாலும், அதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆழ்மனதில் வேரூன்றியது.பள்ளிக்கல்வி முடித்த பின், திருச்சி கலைக்காவிரி கல்லுாரியில் இணைந்து, 'டிப்ளமோ' படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். அதே கல்லுாரியில் எம்.ஏ., படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அதே நேரம், டாக்டர் சுப்ரியா ரவிக்குமாரிடம், குருகுல முறையில் நடனம் கற்றேன். என் தேடல் மற்றும் கற்றல் என்பது, முழுக்க முழுக்க பரதக்கலை சார்ந்தே இருந்தது.நடனப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி, அக்கலையை வளர்த்தெடுக்கும் முனைப்பில் ஈடுபட தயாரானேன். 2010ல் எனக்கு திருமணம் நடந்தது; ஒன்றரை ஆண்டில், கணவர் விபத்தில் இறந்தார். ஏழு மாத கைக்குழுந்தையுடன், செய்வதறியாது திகைத்து நின்றேன்.பள்ளிப்பருவம் துவங்கி, பல்வேறு நெருக்கடி, சவால்களை கடந்து, பரதக்கலையை வளர்த்தெடுக்க தயாரான போது, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த இழப்பு, என்னை துவண்டு போகச் செய்தது.'இனி, என்னால் கலை துறையில் பயணிக்க முடியாது...' என பலரும் பேசினர். நடனப்பள்ளியில் மாணவர் சேர்க்கையும் குறைந்தது.அதன்பின், ஆறேழு ஆண்டு இடைவெளிக்கு பின், தன்னம்பிக்கையை என்னுள் ஆழமாக விதைத்து, மீண்டும் நடனக்கலையில் கால் பதித்தேன்; படிப்படியாக, என் நடனப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகமானது. பரதக்கலையுடன், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை மற்றும் செவ்வியல் கலையை கற்றுத்தருகிறேன்.அது தவிர, எங்கள் நடனப்பள்ளி பயிற்றுனர்களாக இருப்பவர்களுக்கு கர்நாடகா ஹம்பி பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, எம்.ஏ., பரதநாட்டிய கல்வி வழங்க ஏற்பாடு செய்து தருகிறேன். இப்போது மாநிலம் கடந்து, சர்வதேச அளவில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் எங்கள் மாணவியருடன் பங்கேற்று, பெருமையை பறைசாற்றி வருகிறோம்.பரத கலைஞர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், திருப்பூர் மாவட்ட கவின்கலை கலாச்சார அறக்கட்டளையை நிறுவியுள்ளேன். எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் தேடல் இருந்தால் வெற்றிக்கான வாசல் தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.