கடல் தாமரை புத்தக பூங்காவில் சிவாஜி ரசிகர்கள் சங்கமம் திரையுலகில் பிரபுவின் 44ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
பெங்களூரு: கடல் தாமரை புத்தகப் பூங்காவில் சங்கமித்த சிவாஜி ரசிகர்களால் நுாலகமே விழாக்கோலம் பூண்டது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பிரபு தொடர்பான புத்தகங்களை கர்நாடக மாநில டாக்டர் சிவாஜி மற்றும் இளைய திலகம் பிரபு நற்பணி இயக்கத்தினர் அன்பளிப்பாக வழங்கி அசத்தினர்.பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தில், இயங்கி வரும் கடல் தாமரை புத்தகப் பூங்காவுக்கு வாசகர்கள் தினமும் வருகின்றனர். இங்குள்ள புத்தகங்களை நன்கு படித்து மகிழ்கின்றனர்.அன்பளிப்புகர்நாடக மாநில டாக்டர் சிவாஜி மற்றும் இளைய திலகம் பிரபு நற்பணி இயக்கத்தினர் 25க்கும் மேற்பட்ட சிவாஜி, பிரபு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். இயக்க துணை தலைவர் வேணுகோபால், பொது செயலர் ஸ்ரீதர் பிரபு, பொருளாளர் ஸ்ரீனிவாசன், ரசிகர்கள் எலக்ட்ரானிக் சிட்டி ஸ்ரீனிவாசா, யதுநந்தன், கோவிந்தராஜன், செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.வேணுகோபால் கூறியதாவது:இளைய திலகம் பிரபுவின் முதல் திரைப்படமான சங்கிலி 1982ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. இன்றுடன் அவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, 44 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளன.இதை கொண்டாடும் வகையில், காலையில் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரபு பெயருக்கு அர்ச்சனை, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.பரம ரசிகன் இதை தொடர்ந்து, இயக்கத்தின் சார்பில் சிவாஜி, பிரபுவின் புத்தகங்களை கடல் தாமரை புத்தகப் பூங்காவுக்கு அன்பளிப்பாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இப்புத்தகங்கள் மூலம் சிவாஜி, பிரபு குறித்து இளைஞர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். இது அடுத்த தலைமுறைக்கு உதவும்.அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட தினமலர் நிர்வாகத்துக்கு நன்றி. நான் தீவிரமான சிவாஜி ரசிகன்; அவரது பரம பக்தன். என்னுடைய ரத்தம், என்னுடய உயிர் அனைத்திலும் சிவாஜி இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.பொது செயலர் ஸ்ரீதர் பிரபு: 'புதிய பறவை', 'வசந்த மாளிகை' படங்களை எத்தனை முறை பார்த்திருப்பேன் என எனக்கே தெரியாது. சிவாஜியின் அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன்.அவரது நினைவு நாளில், அவர் உயிர் பிரிந்த நேரத்தில் இரவு 7:20 மணிக்கு ஆண்டுதோறும் 5 கிலோ கற்பூரம் ஏற்றுவோம். அதுபோல, அவரது பிறந்தநாளில் அன்னதானம், இசை நிகழ்ச்சிகள் நடத்துவோம். அவரை போன்ற ஒரு நடிகரை மீண்டும் பார்க்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.மெய்சிலிர்த்த ரசிகர்கள்சிவாஜிகணேசன் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்து உள்ளோம் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்பதை நெகிழ்ச்சியுடன் கூறினர். ஒவ்வொரு சினிமா வெளியீட்டின் போதும், தியேட்டரிலேயே வாழ்வோம். பெங்களூரிலிருந்து தமிழகம் சென்று படங்களை பார்த்து மகிழ்வோம்.சென்னை அன்னை இல்லத்திற்கு சென்று சிவாஜியை அடிக்கடி சந்தித்து வருவோம். எனக்கு தமிழ் பேச வராது; ஆனால் புரியும். எங்கள் குடும்பத்தில் அனைவரும் சிவாஜி, பிரபு ரசிகர்கள் என எலக்ட்ரானிக் சிட்டி ஸ்ரீனிவாசா தெரிவித்தார்.கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு புத்தகங்கள் வழங்கியது மன நிறைவாக உள்ளது என மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டே இருந்தனர்.