ஏ.ஐ.சி.டி.இ. தரமறிந்து செயல்பட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் குட்டு
சென்னை: தரமான கல்வி நிறுவனம் மற்றும் தரமற்ற கல்வி நிறுவனம் ஆகிய இரண்டையும் ஒரேமாதிரி நடத்துவது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என்று ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பிற்கு, சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி, இது தொடர்பாக தாக்கல் செய்த ஒரு மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் இந்த கண்டனத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது: முறையான வசதிகள் இல்லாத பொறியியல் கல்வி நிறுவனங்கள், பல்வேறான பொறியியல் சார்ந்த படிப்புகளை வழங்கி வருவது தடையின்றி தொடர்ந்து நடக்கிறது. அதுபோன்ற கல்வி நிறுவனங்கள், ஊழல் அதிகாரிகளின் துணையுடன், எந்தவித இடையூறுமின்றி செயல்பட்டு வருகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஒரே மாதிரியான அளவுகோலில் பார்க்கக்கூடாது. AICTE போன்ற உயர்மட்ட அமைப்பு, நல்ல கல்வி நிறுவனங்களைக் கண்டறிந்து, ஏற்கக்கூடிய கட்டணத்தில், நல்ல பொறியியல் கல்வியை சமூகத்திற்கு வழங்கும் வகையில் அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். அதேபோன்று, தரமற்ற கல்வி நிறுவனங்களை கண்டறிந்து, அவைகளை மூடும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பிற்கு, நீட்டிப்பு அனுமதியை, AICTE மறுத்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வி நிறுவனம் கடந்த 29 ஆண்களாக செயல்பட்டு வருகிறது மற்றும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையின் ஒரு உறுப்பு கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.